மதிமுக மண்டல மாநாடு-ஜெ வாழ்த்து
சென்னை: மதிமுகவின் சென்னை மண்டல இன்று மாலை 4 மணிக்கு தீவுத்திடலில் நடைபெறுகிறது.
மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு இன்று மாலை 4 மணிக்கு சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மதிமுகவினர் பெரும் திரளாக குழுமி வருகின்றனர்.
மாநாட்டுக்கு முன்னதாக இன்று மாலை 3 மணிக்கு சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பிலிருந்து பிரமாண்ட தொண்டர் படை அணிவகுப்பு தொடங்குகிறது.
வாலாஜா சாலை, அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக தீவுத் திடலை அணிவகுப்பு சென்றடைகிறது.
தீவுத்திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அணிவகுப்பை பார்வையிடுகிறார். மாநாட்டு நிகழ்ச்சிகள் மாலை 4 மணிக்குத் தொடங்கும்.
ஜெயலலிதா வாழ்த்து:
மதிமுக சென்னை மண்டல மாநாட்டுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு நடைபெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழகத்தில் நிலவி வரும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கருணாநிதியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் பணியில் அதிமுகவோடு இணைந்து பணியாற்றும் மதிமுகவின் பணி மகத்தானது.
உலகின் கடைக்கோடியில் உள்ள தமிழனின் உரிமைகளையும் பாதுகாக்கும் லட்சியப் பயணத்தில் வெற்றிச் சரித்திரம் படைத்து நிற்கும் மதிமுகவின் சென்னை மண்டல மாநாடு வெற்றி பெற இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.