வேலை வாய்ப்பு முகாமில் தடியடி-மாணவிகள் படுகாயம்!
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த வேலை வாய்ப்பு சிறப்பு முகாமில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 8 மாணவிகள் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை மன்னர் கல்லூரியில் வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தங்களது சான்றிதழ்களை பதிவு செய்ய மாணவ, மாணவிகள் போட்டி போட்டு அரங்கில் நுழைந்ததால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது.
நேரம் ஆக ஆக இந்த நெரிசல் கட்டுக்கடங்காமல் போனது. இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனை தவிர்க்க போலீசார் கடும் முயற்சி எடுத்தனர். ஆனால் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை.
இந்த நிலையில், மாணவ, மாணவியரின் பெற்றோர்களும் அரங்கில் நுழைய முயன்றனர். இதனால் மேலும் நெரிசல் அதிகமானது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஒடினர். இதில், சத்யபிரியா, சாரதா, பைரவி உள்ளிட்ட 8 மாணவிகள் மயங்கி விழுந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தடியடி சம்பவத்திற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பினர் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications