அணு ஒப்பந்தம்: பிடிவாதத்தை தளர்த்தும் காங்.!
டெல்லி: இடைத் தேர்தலை கூட்டணிக் கட்சிகளில் பலவுரம் விரும்பாததால், அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் தனது நிலையை தளர்த்திக் கொண்டுள்ளது காங்கிரஸ். இடதுசாரிகளின் ஆதரவும் தேவை என தற்போது கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், ஒரு பிரச்சினையை மட்டும் மையமாக வைத்து இந்த அரசு இயங்கவில்லை. அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போனால் அது அரசுக்கு தோல்வி என கருத முடியாது.
இப்போதைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவின் சம்மதத்துடன்தான் இந்த ஒப்பந்தத்ைத மேற்கொள்ளப்படும். எதிர்காலத்திலும், இடதுசாரிகளின் ஒப்புதலுடன்தான் அனைத்து முடிவுகளையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எடுக்கும் என்றார் அகமது.
இடதுசாரிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உறுதியாக இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கு நேர் மாறாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ள கருத்து, அதன் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தெளிவுபடுத்துகிறது.
இடைத் தேர்தலை கூட்டணிக் கட்சிகள் பலவும் விரும்பாததே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.
எனவே வருகிற 25ம் தேதி நடைபெறும் ஒருங்கிணைப்புக்கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகள் ஒப்புதல் தராவிட்டால் அதை காங்கிரஸும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் நிராகரிக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் பண வீக்கத்தையும் விலைவாசியும் குறைக்கும் வேலைகளில் மன்மோகன் சிங் கவனம் செலுத்த வேண்டும், அணு ஒப்பந்த விவகாரத்தை கிடப்பில் போடலாம் என பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் காங்கிரசிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டன.
அணு ஒப்பந்த விஷயத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாகவே முக்கிய கூட்டணிக் கட்சிகள் இருப்பதால் காங்கிரஸ் வேறு வழியில்லாமல் இறங்கி வர ஆரம்பித்துள்ளது.