'சேது' புனித பயணத்தில் வெற்றி பெறுவேன்: பாலு

தேசிய நண்பர்கள் பேரவை சார்பில் எழுத்தாளர் ஆ.கோபண்ணா எழுதிய சேது சமுத்திர திட்டம் ஏன்? எதற்காக? என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர், சர்.பிட்டி.தியாகராயர் அரங்கில் நடந்தது.
விழாவுக்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு புத்தகத்தை வெளியிட்டார். அதனை சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார்.
அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ.ராமசாமி புத்தகத்தை திறனாய்வு செய்து பேசினார். புத்தகத்தின் ஆசிரியர் ஆ.கோபண்ணா ஏற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு பேசுகையில், மதுரையில் 2005-ம் ஆண்டு சேது சமுத்திர திட்ட தொடக்கவிழா நடைபெற்றது. அந்த விழா முடிந்த உடன் சோனியாகாந்தி என்னிடம், இந்த திட்டத்தை விரைந்து அடுத்த தேர்தலுக்குள் முடித்து விடுங்கள் என்றார். அந்த கடமையை இதுவரை செய்ய முடியவில்லையே என்ற தவிப்பும், ஆதங்கமும் என் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிகிறது.
சேது சமுத்திர திட்டத்தை பொறுத்தவரை நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. கடைசி வரை போராடுவேன். போராடி வெற்றி பெறுவேன்.
திட்டம் வரும்போது பிரச்சினை வரும். பிரச்சினை வரும்போது கவலைப்படாமல் புல்டோசர் போல போக வேண்டும். நான் வெட்ட வெட்ட துளிர்விடுவேன். அவர்கள் என் நிழலைத்தான் வெட்டுகிறார்கள். இது புனித பயணம். இதில் யாரும் குறுக்கிட முடியாது. அந்த பயணத்தில் வெற்றி பெறுவேன் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications