அதிமுக-பாமக கூட்டணிக்கு சுவாமி எதிர்ப்பு?
சென்னை: திமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள பாமகவை, அதிமுக கூட்டணியில் சேர்க்கக் கூடாது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாமகவை திமுக கூட்டணி வெளியேற்றி விட்டது. அடுத்து பாமக எங்கே போகும், யார் பாமகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவை விட்டால் அதிமுக, அதிமுகவை விட்டால் திமுக என்ற நிலையில்தான் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் கூட்டணி சேருவது வழக்கம். அந்த அடிப்படையில் திமுகவால் வெளியற்றப்பட்டு விட்ட பாமக, அடுத்து அதிமுகவில்தான் சேரும் என்பது அனைவரின் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.
இந் நிலையில் பாமகவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வலியுறுத்தியுள்ளாராம் சுப்பிரமணியம் சுவாமி.
சமீபத்தில் கொடநாடு எஸ்டேட் சென்ற சுவாமி அங்கு ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியபோது இந்த கோரிக்கையை முன் வைத்தாராம்.
பாமகவை திமுக கைவிட்டு விட்ட நிலையில், அதை நாமும் கைவிட்டால், அக்கட்சியின் வளர்ச்சியை முற்றிலும் தடுத்து விடலாம் என்பது சுவாமியின் எண்ணம் என்கிறார்கள்.
சுவாமியின் கருத்துக்களை கேட்டுக் கொண்ட ஜெயலலிதா அவருக்கு எந்தப் பதிலையும் தரவில்லையாம்.
அரசியல் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அரசியல்வாதிகளின் எழுதப்படாத வேதம். எனவே பாமகவுக்கு யாருடைய அரவணைப்பு கிடைக்கப் போகிறது என்பதில் இப்போதைக்கு தெளிவான நிலை இல்லை. தேர்தல் நெருங்கினால்தான் இதில் தெளிவு பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications