திண்டிவனம் பாமக நகராட்சித் தலைவர் திமுகவுக்கு தாவல்!
சென்னை: திமுக, பாமக இடையிலான உறவு முறிவுக்குப் பின்னர், டாக்டர் ராமதாஸின் பேட்டையிலிருந்து முதல் பெரிய தாவல் நடந்துள்ளது. திண்டிவனம் நகராட்சித் தலைவராக இருக்கும் பாமகவின் பூபாலன், திமுகவில் இணைந்துள்ளார்.
திமுக, பாமக உறவு முறிவைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில் திமுக ஆதரவுடன் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக திமுகவினர் பெரும்பான்மையாக உள்ள அதேசமயம், தலைவர் பதவிகளில் அமர்ந்துள்ள பாமகவினர் திமுக பக்கம் சாய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாமகவிலிருந்து முதல் தாவல், டாக்டர் ராமதாஸின் கோட்டையான திண்டிவனத்திலிருந்து வந்துள்ளது. திண்டிவனம் நகராட்சித் தலைவர் பதவியில் தற்போது பாமகவைச் ேசர்ந்த பூபாலன் உள்ளார்.
நேற்று அவர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பூபாலன் பேசுகையில், நான் 30 வருடங்களாக திமுகவில்தான் இருந்தேன். கடந்த தேர்தலில்தான் பாமகவில் இணைந்தேன். இப்போது மீண்டும் நல்ல செய்ய திமுகவுக்குத் திரும்பியுள்ளேன்.
பாமக மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார் பூபாலன்.
திண்டிவனத்தில் தொடங்கியுள்ள இந்த தாவல் அடுத்தடுத்து தொடரும் என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் பாமக வட்டாரம் கலங்கியுள்ளது.