ஏஜென்ட் மோசடி: சவூதியில் 70 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு
துபாய்: மும்பை ஏஜென்ட்டால் ஏமாற்றப்பட்டு சவூதிக்கு அனுப்பப்பட்ட 70 இந்தியத் தொழிலாளர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட் இந்த தொழிலாளர்களிடம் தலா ரூ. 1 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ரியாத்தில், மாதம் ரூ. 10,000க்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அனுப்பி வைத்துள்ளார்.
சமையல்காரர், கேஷியர் உள்ளிட்ட வேலைகளில் நீங்கள் அமர்த்தப்படுவீர்கள் என அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரியாத் வந்து சேர்ந்த பின்னர் அங்குள்ள ஸ்பான்சர், மும்பையில் கூறியபடி நடக்காமல், மாதம் ரூ. 5000 சம்பளத்திற்கு அனைவரையும் வேலையில் சேர்த்து விட்டுள்ளார். அதுவும் உறுதியளித்த வேலை அல்ல.
மும்பையில் இந்தத் தொழிலாளர்கள் 2ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் மாதம் 8000 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனவும், சாப்பாட்டுப் படியாக ரூ. 2000 தரப்படும் என எழுதப்பட்டிருந்தது. ஆனால் இங்கு வந்த பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அனைவரும் உணர்ந்தனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனைவரும் தாங்கள் வேலை பார்க்க மாட்டோம், பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என ரியாத் ஸ்பான்சரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து 7 தொழிலாளர்களை சவூதியை விட்டு அனுப்பி விட்டார் ஸ்பான்சர். இதனால் அவர்கள் வேலையும் இல்லாமல், ரூ. 1 லட்சம் பணத்தையும் இழந்து நாடு திரும்பியுள்ளனர்.
இதனால் பயந்து போன மற்ற தொழிலாளர்கள் வேறு வழியில்லாமல் கொடுத்த வேலையைச் செய்ய ஒப்புக் கொண்டு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications