வெட்கம், கூச்சம், பதட்டத்தை விலக்கும் ஹார்மோன்
லண்டன்: முற்றிலும் புதியவர்களைக் கண்டால் கூச்சம் வருகிறதா?, பார்ட்டிகளுக்குப் போக வெட்கமாக இருக்கிறதா?, காதலைச் சொல்ல தயக்கம் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள். அத்தனையையும் போக்கும் வகையிலான ஹார்மோன் ஒன்றின் மீது விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
ஆக்ஸிடாசின் என்பது இந்த ஹார்மோனின் பெயர். இந்த ஹார்மோனால் கூச்சம், வெட்கம், பதட்டம் போய் விடுமாம்.
இந்த ஹார்மோன் ஏற்கனவே வேறு சில வேலைகளையும் செய்து வருகிறது. கர்ப்பிணித் தாய்மார்களின் கருப்பையில் வளரும் சிசுவுக்கும், தாய்மாருக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவது, பதட்டத்தைத் தணிப்பது, பயத்தைக் குறைப்பது ஆகியவற்றை இந்த ஹார்மோன் செய்து வருகிறதாம்.
இந்த நிலையில் ஆக்சிடாசின் ஹார்மோனைப் பயன்படுத்தி வெட்கம், கூச்சம் ஆகியவற்றை போக்க பயன்படுத்துவது குறித்த ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலிய நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஹார்மோனை வணிக ரீதியில் பயன்படுத்தும் வேலையிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனராம்.
இதுகுறித்து பேராசிரியர் பால் ஸாக் கூறுகையில், இந்த ஹார்மோனால் பதட்டம் தணியும். அனைவருடனும் சகஜமாக பழகும் தன்மை உருவாகும். பயம் குறையும், கூச்சத்தன்மை நீங்கும். இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்பது இந்த ஹார்மோனின் முக்கிய அம்சமாகும் என்றார்.
ஸாக் தலைமையிலான குழுதான், இங்கிலாந்தின் கிளார்மான்ட் பல்கலைக்கழகத்தில் இந்த ஹார்மோன் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான நோயாளிகளிடம் இக்குழு சோதனை நடத்தியுள்ளதாம்.
இதுதவிர, இரு பார்ட்னர்கள் உடலுறவில் ஈடுபட்ட பின்னர், அவர்களுக்கிடையே, அன்பை அதிகரிக்கும் வேலையையும் இந்த ஹார்மோன் செய்கிறதாம்.












Click it and Unblock the Notifications