என் ஆட்சியில் அப்படி.. ஆனால், இப்போ..: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சொத்து வரி குறித்து முதல்வர் கருணாநிதி அளித்த விளக்கவுரையை அரசாணையாக வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக அரசால் சொத்து வரி உயர்த்துவதற்காக வெளியிடப்பட்ட அரசாணை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், இல்லையெனில், அதிமுக களத்தில் இறங்கும் என்றும் முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

1998ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு உள்பட்ட கட்டிடங்களுக்கு சொத்து வரியை உயர்த்தி, பேரூராட்சிகளுக்கும் சொத்து வரியை அறிமுகப்படுத்தி, 1.10.1998 முதல் அதை நடைமுறைக்கு கொண்டு வந்ததை முழுமையாக மறைத்து உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப சொத்து வரியை தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும்,

தேவையில்லையெனில் விட்டுவிடலாம் என்றும், அரசு உயர்ந்தபட்ச சதவீதத்தை மட்டுமே வகுத்தளித்துள்ளது என்றும், சொத்து வரியை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்றும் விளக்கவுரை அளித்து இருக்கிறார்.

ஆனால் இது போன்ற வார்த்தைகள் அரசு ஆணையில் இல்லை. எனவே முதல்வரின் விளக்கவுரையை அரசாணையாக வெளியிட வேண்டும்.

எனது ஆட்சி காலத்தில், திடக்கழிவு மேலாண்மை, குடிசைப் பகுதி மேம்பாடு, பாதாள சாக்கடை திட்டம், சாலைகள், மழைநீர் வடிகால், பூங்கா மற்றும் விளையாட்டு மையங்கள், ஊரக சுகாதாரம், நமது கிராமம் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதும், மக்கள் மீது சுமையை திணிக்கக் கூடாது என்ற அடிப்படையில் 1.10.2003 முதல் சொத்து வரி ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை.

முதல்வர் கருணாநிதியின் விளக்கத்தை வைத்து சொத்து வரி குறித்த முடிவு எடுப்பதில் சிரமங்கள் இருப்பதாக உள்ளாட்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, சொத்து வரி உயர்த்தப்படுமா? அல்லது உயர்த்தப்படாதா? என்ற சந்தேகத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே, சொத்து வரி குறித்த தன்னுடைய விளக்கவுரையை அரசு ஆணையாக வெளியிட்டால் தான் இந்த சொத்து வரி உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஏதுவாக இருக்கும் என்று உள்ளாட்சி அமைப்புகள் கருதுகின்றன.

சொத்து வரி தொடர்பாக தான் அளித்த விளக்க உரையை அரசு ஆணையாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இல்லையெனில், இது குறித்து மாபெரும் போராட்டத்தை நடத்த அதிமுக தயங்காது என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது ஆட்சி காலத்தின்போது சுனாமி நிவாரணப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டத்தை நான் கூட்டவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.

சுனாமி நிவாரணப் பணிகள் தொடர்பாக நான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தேன் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுனாமியால் சில மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தது என்பதால் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களையும் கூப்பிட்டு ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். போர்க்கால வேகத்தில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டிருந்தேன்.

ஆட்சித் தலைவர்களுக்கு உதவ மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் அனுப்பியிருந்தேன். மேலும், அப்போதைய தலைமைச்செயலாளருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிவாரணப் பணிகளை நானே நேரடியாக பார்வையிட்டு முடுக்கினேன்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நேரில் சென்று உதவிகளை வழங்கினேன். நிவாரணப் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக நானே நேரில் சென்று அனைத்தையும் மேற்கொண்டேன்.

அதை விட்டு விட்டு அனைத்து கலெக்டர்களையும் சென்னைக்கு அழைத்து, விவாதம் நடத்தியிருந்தால் அதனால் பொன்னான நேரம்தான் வீணாகியிருக்குமே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கியிருப்பதில் தடங்கல் ஏற்பட்டிருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+