வட கிழக்கில் பலத்த மழை-14 சென்னை ரயில்கள் ரத்து
சென்னை: பலத்த மழை காரணமாக சென்னையிலிருந்தும் சென்னை வழியாகவும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பிகார், வட கிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாகிவிட்டன.
சாலைகள், தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், தமிழகத்திலிருந்து இந்த மாநிலங்களுக்கு செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போது மேலும் 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
இந்தூரில் இருந்து சென்னை வழியாக இரவு 11.55 மணிக்கு, திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் திருவனந்தபுரம் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (எண்- 6325), திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக காலை 9.55 மணிக்கு, சாலிமருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (எண்- 6323) ஆகியவை 27ம் தேதியும்,
பெங்களூரில் இருந்து கெளஹாத்திக்கு, சென்னை வழியாக காலை 6.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (எண்- 2509) 26ம் தேதியில் இருந்து 28ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜஸ்வந்த்பூரில் இருந்து சென்னை வழியாக காலை 9.55 மணிக்கு, முசாபர்பூருக்கு இயக்கப்படும் ரயில் (எண்- 5227), கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வழியாக காலை 7.50 மணிக்கு, கொல்கத்தாவின் ஹவுராவுக்கு இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்- 2666) 28ம் தேதியும்,
கெளஹாத்தியில் இருந்து சென்னை சென்டிரல் வழியாக காலை 5 மணிக்கு, ஜஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்- 0202) 29ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், கெளஹாத்தியில் இருந்து சென்ட்ரல் வழியாக காலை 4.50 மணிக்கு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (எண்- 2508) 29ம் தேதியும்,
ஹவுராவில் இருந்து காட்பாடி வழியாக இரவு 11.20 மணிக்கு, மைசூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் (எண்- 0803) 28ம் தேதியும், மைசூரில் இருந்து காட்பாடி வழியாக காலை 7.40 மணிக்கு, ஹவுராவுக்கு இயக்கப்படும் ஹவுரா எக்ஸ்பிரஸ் (எண்- 0804) இன்று (செவ்வாய்கிழமை) முதல் 30ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்டிரல் வழியாக காலை 6.30 மணிக்கு, பாட்னாவுக்கு இயக்கப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ் (எண்- 6309) இன்றும், நாளையும் (புதன்கிழமையும்),
பாட்னாவில் இருந்து சென்டிரல் வழியாக அதிகாலை 4.15 மணிக்கு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (எண்- 6310) ரயில் ஆகியவை உள்பட 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அறிவி்க்கப்பட்டுள்ளது.