மேலும் குறையும் மொபைல் கட்டணங்கள்!
டெல்லி: செல்போன் சர்வீஸ் ஆபரேட்டர்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டண விகிதம் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, செல்போன் அழைப்புக் கட்டணங்கள் கணிசமாகக் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோலியப் பொருட்களின் கிடுகிடு விலை உயர்வைத் தொடர்ந்து எங்கும் விலையேற்றம், எதிலும் விலையேற்றம் என்ற இன்றைய சூழலில், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் கட்டணக் குறைப்பு எனும் ஆறுதல் செய்தியைக் காதில் போட்டுள்ளது.
செல்போன் சேவையை வழங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் தற்போது நிமிடத்துக்கு 0.49 பைசா முதல் ரூ.1.20 வரை வாடிக்கையாளர்களிடம் அழைப்புக் கட்டணங்களாக வசூலித்து வருகின்றன. வெளி மாநில ரோமிங்கில் வரும் கால்களுக்குக் கூட இருமடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
நமக்கு செல்போன் சேவை அளிக்க இந்த நிறுவனங்கள் மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்தும் கட்டணம் ஒரு நிமிடத்துக்கு 30 பைசா மட்டுமே. இந்தக் கட்டணம் கூட 2003-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும்.
அதன்பிறகு பல்வேறு தருணங்களில் கட்டணத்தைக் கணிசமாக தொலைத் தொடர்புத் துறை குறைத்துள்ளது. இதன்படி தற்போது ஒரு நிமிடத்துக்கு 10 காசுதான் அரசுக்கு செலுத்துகின்றன செல்போன் நிறுவனங்கள்.
ஆனால் கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பான ட்ராய் இதுவரை, செல்போன் ஆபரேட்டர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் குறித்து எதுவும் அறிவுறுத்தாததால் பழைய கட்டணத்திலேயே கணிசமாக லாபம் பார்த்து வருகின்றன செல்போன் கம்பெனிகள். அதாவது அரசுக்கு 10 பைசா செலுத்திவிட்டு, நம்மிடம் 1 ரூபாய் வசூலிக்கின்றன. அதேபோல அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட 10 மடங்கு அதிகத் தொகையை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலிக்கின்றன.
வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திருத்தப்பட்ட புதிய கட்டண விகிதத்தை அறிவிக்குமாறு ட்ராய்க்கு கடிதம் எழுதியுள்ளது மத்திய தொலைத் தொடர்புத் துறை.
மத்திய அரசு அளிக்கிற கட்டணச் சலுகைகள் சேர வேண்டியது செல்போன் நிறுவனங்களுக்கல்ல, அவற்றைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு. எனவே அரசு ஆண்டு தேறும் அளித்து வரும் சலுகைகளை உடனுக்குடன் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யாமல், ஆண்டுக் கணக்கில் அமைதி காத்து வருவது நல்லதல்ல, என அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளது தொலைத் தொடர்புத் துறை.
எனவே இன்னும் ஓரிரு நாட்களில் மொபைல் கட்டணங்களில் பெரும் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அளித்த கட்டணச் சலுகையை ட்ராய் நடைமுறைப்படுத்தாமல் விட்டதால் இந்த 5 ஆண்டுகளில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் செல்போன் ஆபரேட்டர்களுக்கு லாபமாகக் கிடைத்திருக்கிறது என்பதை தொலைத் தொடர்புத் துறையின் இக்கடிதம் உறுதி செய்கிறது.
திருந்தவே மாட்டார்களா...!