பிரபாகரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் துஷாரா பெரீஸ், சிங்களம் மற்றும் தமிழில் இயக்கியுள்ள படம் பிரபாகரன். இப்படத்தில் விடுதலைப் புலிகள் குறித்தும், இலங்கைத் தமிழர்கள் குறித்தும் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் சென்னை ஜெமினி லேபுக்கு படத்தை பிராசஸ் செய்வதற்காக பெரீஸ் வந்திருந்தார். அதை அறிந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தமிழ் அமைப்பினர் அங்குசென்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். திரைப்படச் சுருளையும் கைப்பற்றினர். அப்போது பெரீஸ் தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசார்பில் அதன் தலைவர் திருமாவளவன் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் பிரபாகரன் படத்திற்கு தடை விதிக்க கோரினார். இதை ஏற்று ஏப்ரல் 2ம் தேதி பிரபாகரன் படத்தை பிராசஸ் செய்வதற்கும், அதன் நெகட்டிவை தயாரிப்பாளர்களிடம் வழங்கவும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் தடையை நீக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த சிட்டி சிவில் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications