அதிமுக- பாமக கூட்டணி?: ஜி.கே.மணி விளக்கம்
நாகர்கோவில்: அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மணி அளித்த பதில்களும்:
கேள்வி: அதிமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே?
ஜி.கே.மணி: காங்கிரஸ் கூட்டணியில்நாங்கள் நீடிக்கிறோம். எனவே அதிமுகவுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை.
கேள்வி: வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுமா?
ஜி.கே.மணி: இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.
கேள்வி: காங்கிரஸ் கூட்டணியில் பாமக இருந்தாலும், தமிழகத்தில் திமுகதானே சீட் ஒதுக்கும்?
ஜி.கே.மணி: நாங்களாக திமுக அணியிலிருந்து விலகவில்லை. அவர்கள்தான் வெளியேற்றினார்கள். காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இருப்பதால், திமுகவிடம் நாங்கள் சீட் ஒதுக்கீடு குறித்துப் பேச மாட்டோம்.
கேள்வி: இதனால் மக்கள் குழம்ப மாட்டார்களா?
ஜி.கே.மணி: தேர்தல் வரும்போது மக்களின் குழப்பமெல்லாம் நீங்கி விடும் என்றார் மணி.
முன்னதாக ஜூலை மாதம் 9ம் தேதி நாகர்கோவிலில் பாமக சார்பில் நடைபெறவுள்ள மது ஒழிப்பு விழிப்புணர்வு மகளிர் மாநாடு தொடர்பாக நடந்த பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் மணி கலந்து கொண்டார்.