சோனியாவுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு: புதுத் தலைவர் ஞானதேசிகன்?
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, கடும் முயற்சிகளுக்குப் பிறகு நேற்று கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், கிருஷ்ணசாமியை தூக்கி விட்டு, ஜி.கே.வாசன் ஆதரவாளர் ஒருவருக்கு அதைக்கொடுக்க மேலிடம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. ஞானதேசிகன் உள்ளிட்ட 3 பேரின் பெயர்கள் இதில் அடிபடுகின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ள பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்களும் அவரை மாற்றக் கோரி மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றன. இதில் முன்னணியில் இருப்பது மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தலைையிலான பிரிவினர்தான்.
சமீபத்தில் கோவை மாவட்ட ஜி.கே.வாசன் ஆதரவு நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இதற்கு மேலிடப் பார்வையாளர் அருண்குமாருடன் கை கோர்த்துக் கொண்டு முன்னாள் அமைச்சர் பிரபுவும், கிருஷ்ணசாமியும் இவ்வாறு நடந்து கொண்டதாக வாசன்தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
நீக்கத்தைக் கண்டித்து கோவையில் நடந்த ரகளையால், கிருஷ்ணசாமி மீது கட்சி மேலிடம் பெரும் கோபத்துடன் உள்ளது. இதையடுத்து டெல்லி விரைந்த கிருஷ்ணசாமி, சோனியாவை சந்திக்க முயன்றார். ஆனால் அவருக்கு டைம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார் சோனியா.
இதனால் அப்செட் ஆகியிருந்த கிருஷ்ணசாமிக்கு சென்னைக்கும் திரும்பாமல் டெல்லியிலேயே முகாமிட்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில் நேற்று சோனியாவை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
நேற்றைய சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் கட்சியின்கூடுதல் பார்வையாளரான மத்திய அமைச்சர் வயலார் ரவி, அருண்குமார் ஆகியோரும் உடன் இருந்தனர். 20 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நடந்தது.
கிருஷ்ணசாமியை மாற்ற முடிவு:
இந்த நிலையில் கிருஷ்ணசாமியை மாற்றும் முடிவுக்கு கட்சி மேலிடம் வந்து விட்டதாக தெரிகிறது.
புதிய தலைவர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஜி.கே.வாசன், அவரது ஆதரவாளரான ஞானதேசிகன் மற்றும் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
வாசனை நியமிக்க கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்தால், அவரது ஆதரவாளரான ஞானதேசிகனுக்கு பொறுப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
சோனியாவுடனான சந்திப்பு குறித்து கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள உள்ள அணுகுமுறை குறித்தும் தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை வலுப்படுத்துவதற்காக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கமிட்டிகளை மாற்றியமைப்பது பற்றியும் சோனியாவிடம் பேசினேன். விரைவில் மாற்றம் தொடர்பான அறிவிப்பை கட்சி மேலிடம் வெளியிடும் என்றார்.
புதிய தலைவர் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications