'டாஸ்மாக்' பாரில் ரவுடி கொலை: 10 பேர் வெட்டி சாய்த்தனர்
சென்னை: சென்னையில் டாஸ்மாக் மது பாரில் பயங்கர ரவுடியை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்தது. நகரின் மையப் பகுதியில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை சூளைமேடு பஸ் நிலையம் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இத்துடன் பாரும் இணைந்துள்ளது. இங்கு நேற்று மாலை 10 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தது.
அனைவரின் கையிலும் அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. உள்ளே நுழைந்த அக்கும்பல் மது அருந்திக் கொண்டிருந்த ஒரு வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
திடீரென நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. குடிமகன்கள் அலறி அடித்து ஓடினர்.
போலீஸார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொல்லப்பட்ட நபர் பெயர் ராஜேஷ். அப்பகுதியில் பயங்கர ரவுடி. ஆரம்பத்தில் பாரி தெருவில் வசித்து வந்தார். இவரது தந்தை டீக்கடை வைத்துள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு கிண்டி, கத்திப்பாரா சந்திப்பில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டல் முன்பு உதயா என்கிற ரவுடி வெட்டிக்கொல்லப்பட்டார். இதில் ராஜேஷ் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில்தான் அவர் விடுதலையானார்.
எனவே உதயா கொலைக்குப் பழிக்குப் பழியாக ராஜேஷை போட்டுத் தள்ளியிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications