மதுரையில் 2500 வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு!
மதுரை: மதுரையில் வக்கீல் ஒருவர் காவல் நிலையம் முன்பு தாக்கப்பட்டார். அவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மதுரை வழக்கறிஞர்கள் 2500 பேரும் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
மதுரையில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவர் செல்வம்.
இவர் சிந்தாமணி பஞ்சாயத்து தலைவராகவும் பதவி வகிக்கிறார்.
வழக்கறிஞர் செல்வம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ஒரு வழக்கு சம்பந்தமாக கீரத்துரை காவல் நிலையத்திற்கு சென்று விட்டு திரும்பியுள்ளார்.
அப்போது காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த சிலர் செல்வத்தை பட்டாக் கத்தியால் தாக்கி விட்டு மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர்.
இதில் படு காயம் அடைந்த செல்வம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இச் சம்பவத்தில் போலீசாருக்கு குற்றவாளிகளை அடையாளம் தெரிந்திருந்தும் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், வழக்கறிஞர் செல்வம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்து நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் சுமார் 2500 வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.