தேர்தலை சந்திக்கத் தயாராகுங்கள்: சோனியா திடீர் அழைப்பு

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே பெரும் இழுபறி நிலவுகிறது. இதுதொடர்பாக நடந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மறுபக்கம், இடைத் தேர்தலுக்கு பாஜக பக்காவாக தயாராகத் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக அத்வானி உள்ளிட்ட 6 வேட்பாளர்களின் பெயர்களை அதிரடியாக பாஜக அறிவித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தேர்தலுக்கு காங்கிரஸார் தயாராகுமாறு சோனியா காந்தி அழைபபு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், காரியக கமிட்டி உறுப்பினர்களுடன் சோனியா இன்று அவசர ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் இது நடந்தது.
இக்கூட்டம் குறித்து பின்னர் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லியும், பொதுச் செயலாளர் ஜனார்தன் திவிவேதியும் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் பேரணிகள், பிரசாரக் கூட்டங்களை நடத்துமாறும், லோக்சபா தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நிலவுகின்ற சூழ்நிலைக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மத்திய அரசு தனது ஆட்சிக்காலத்தின் கடைசி ஆண்டில் உள்ளது. எனவே எந்த அரசாக இருந்தாலும், இந்த ஆண்டில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடத்தான் செய்யும்.
இன்றைய கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்கப்படவில்லை.
அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு கமிட்டிகள், பிற கமிட்டிகளை அமைக்குமாறும், தேர்தல் அறிக்கைகள தயார் செய்யுமாறும் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
விரைவில் மாநில தலைவர்கள், சட்டசபை கட்சித் தலைவர்கள், மத்திய நிர்வாக குழு உறுப்பினர்கள், காரியக் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய புத்தாக்க பயிற்சி கூட்டம் டெல்லியில் விரைவில் நடைபெறவுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியினருக்கு சோனியா பிறப்பித்துள்ள இந்த திடீர் உத்தரவு, தேர்தல் விரைவில் வரலாம் என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications