இலங்கைக்கு இந்திய வீரர்களை அனுப்ப நெடுமாறன் கண்டனம்

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமருக்கு பாதுகாப்பு அளிப்பது என்ற போர்வையில், 3 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியப் படை வீரர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவதாகவும், முதல் கட்டமாக 1500 வீரர்கள் கொழும்பு சென்று விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த வாரம் இலங்கை சென்ற இந்திய உயர் அதிகாரிகள் குழு ராணுவ உதவி குறித்து பேசுவதற்கு சென்றிருக்கிறது என குற்றம்சாட்டப்பட்டது இப்போது உறுதியாகியிருக்கிறது.
வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற நாடுகளில் சார்க் மாநாடு நடைபெற்றபோது அவற்றில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமருக்கு இவ்வளவு பெருந் தொகையிலான பாதுகாப்புப் படை வீரர்கள் அனுப்பப்பட்டதில்லை. சார்க் மாநாடோ, வேறு சர்வதேச மாநாடுகளோ எதுவானாலும் கலந்து கொள்ள வரும் அரசுத் தலைவர்களுக்கு மாநாடு நடைபெறும் நாட்டின் அரசுதான் பாதுகாப்பு அளிப்பது மரபு மட்டுமல்ல, கட்டாய கடமையும் ஆகும்.
தனது நாட்டுக்கு வரும் தலைவருக்கு அன்னிய நாட்டு படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பதை எந்த நாடும் அனுமதிக்காது. வருகை தரும் அரசுத் தலைவர்கள் தங்களின் சொந்த மெய்க்காவல் படையினரை மட்டுமே அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள். இது உலக வழக்கமாகும்.
ஆனால் பிரதமருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பெருந்தொகையாக அனுப்பப்படும் சிறப்புப் பயிற்சி பெற்ற இந்திய வீரர்களை மாநாட்டுக்கு பிறகு அங்கேயே வைத்துக் கொண்டு ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அவர்களை பயன்படுத்த சிங்கள அரசு தீட்டிய திட்டத்திற்கு இந்திய அரசும் இணக்கம் தெரிவித்திருப்பதான சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சதித் திட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழுமாறு தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications