மதுரை பெட்ரோல் பங்குகளுக்கு ஒரு வாரமாக பற்றாக்குறை சப்ளை
மதுரை: கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மதுரை மாவட்டத்திற்குரிய பெட்ரோல், டீசல் முழுமையாக சப்ளை செய்யப்படவில்லை என அங்குள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் குமுறுகின்றனர்.
தமிழகம் முழுவதும் ஆட்டிப் படைத்து வரும் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை மதுரை மாவட்ட மக்களை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக படுத்தி வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 104 பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதில் நகருக்குள் மட்டும் 74 நிலையங்கள் உள்ளன. இந்த பெட்ரோல் பங்குகளுக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் தேவையான அளவுக்கு பெட்ரோல்,டீசல் சப்ளை இல்லையாம். இதனால் இருப்பதை வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டுள்ளனர் பங்க் உரிமையாளர்கள்.
மதுரை மாவட்ட பங்குகளுக்கு மதுரை அருகே உள்ள கப்பலூர் மற்றும் கரூரிலிருந்துதான் பெட்ரோல், டீசல் சப்ளை ஆகிறது. இங்கிருந்து தற்போது ரேஷன் முறையில்தான் மதுரை மாவட்ட பங்குகளுக்கு எரிபொருள் சப்ளை செய்யப்படுகிறதாம்.
மதுரை மாவட்ட பங்குகளில் மாதந்தோறும் 29 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. டீசல் விற்பனை அளவு தினசரி 1 லட்சம் லிட்டராகும்.
ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் பின்னர் நிலைமை மாறிவிட்டது. வழக்கமாக தரப்படும் அளவை விட குறைச்சலாகத்தான் தற்போது பங்குகளுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை ஆகிறதாம்.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக பற்றாக்குறையுடன் பங்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. பல பங்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என்ற போர்டுகளையும் காண முடிகிறது.












Click it and Unblock the Notifications