கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பால் அவமானம்-பெண் தற்கொலை முயற்சி
திருவாரூர்: திருவாரூர் அருகே வயலில் மரம் வெட்டியவர்களை திட்டியதற்காக ஊர் பஞ்சாயத்து முன்பு ஒரு பெண்ணை முட்டி போட வைத்ததால் அப் பெண் வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், கல்யாண மகாதேவி கிராமத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவரின் மனைவி மணிமேகலை (32).
இவர்களுக்கு சொந்தமான வயலில் உள்ள மரங்களை வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் வேலை செய்த சிலர் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மணிமேகலை அவர்களை திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஊர் தலைவர் கணேசனிடம் இது பற்றி புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால், இது குறித்து விசாரிக்க ஊர் பஞ்சாயத்து கூட்டம் அந்த ஊர் மரத்தடியில் கூட்டப்பட்டது. அப்போது, மணிமேகலை செயலுக்கு மரத்தடி கூட்டம் கண்டனம் தெரிவித்தோடு, அபராதமாக ரூ 20,000 கட்ட வேண்டும் அல்லது ஊர் மக்கள் முன்னிலையில் ஒரு நாள் முழுக்க முட்டி போட வேண்டும் என்று வினோத தீர்ப்பு கூறப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
இதனால் மனம் உடைந்த மணிமேகலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச் சம்பவம் குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசார் நடத்திய விசாரணையில் ஊர் மரத்தடி கூட்டம் நடத்தி மணிமேகலையை தற்கொலைக்கு தூண்டிய ஊர் பஞ்சாயத்து தலைவர் கணேசன், தேமுதிக ஒன்றிய இளைஞரணி செயலாளர் காசிநாதன் உள்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications