சோனியா-அமர்சிங் பேச்சு: காங்.கை கப்பாற்றுகிறது சமாஜ்வாடி

அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் 6ம் தேதிக்குள் இடதுசாரிகளின் ஆதரவு வாபஸாக உள்ள நிலையில், இதுவரை ஒதுக்கி வைத்திருந்த முலாயம் சிங்கிடம் காங்கிரஸ் மண்டியிட்டுள்ளது.
முலாயமுடன் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தைகளும் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நடத்திய பேச்சும் வெற்றி பெற்றுவிட்ட நிலையில், இப்போது அமெரிக்காவில் உள்ள அக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங் நேற்றிரவு தொலைபேசி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேசினார்.
அப்போது ஆதரவை அமர் சிங் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இத்தனை காலம் இந்த ஒப்பந்தத்தை இடதுசாரிகளுடன் இணைந்து எதிர்த்துவிட்டு இப்போது மட்டும் அதை ஆதரிக்க முடியாது என்றும் முலாயம் சிங்கும்-அமர்சிங்கும் தெளிவுபடுத்திவிட்டனர்.
எங்களது ஆதரவு இடைத் தேர்தலை தவிர்க்கவும், பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றியைத் தவிர்க்கவும் தானே தவிர அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு அல்ல என்று கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் சர்வதேச அணு சக்திக் கழகத்துடனும் ஜி8 மாநாட்டில் அமெரிக்க அதிபர் புஷ்சுடனும் பிரதமர் மன்மோகன் சிங் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்துவதை எதிர்க்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
இப்போதைக்கு இது போதும் என்ற முடிவில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங், முலாயமின் ஆதரவுக்கு தலையாட்டிவிட்டார். இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதையடுத்தே நேற்று அமர்சிங்குடன் அவர் தொலைபேசியில் பேசினார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
இதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.
543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் ஆட்சியில் நீடிக்க காங்கிரசுக்கு 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. இப்போது காங்கிரஸ் கூட்டணியிடம் 237 எம்பிக்களே உள்ளனர். இடதுசாரிகளிடம் 59 எம்பி்க்கள் உள்ளனர்.
இடதுசாரிகளின் ஆதரவை வாபஸ் பெற்றால் மத்திய அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சியிடம் 39 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் ஆகரவு இருந்தால் மத்திய அரசு தப்பிவிடும்.
முலாயமுடன் காங்கிரஸ் நெருங்கியதையடுத்து சமீபத்தில் தான் மாயாவதி தனது 17 எம்பிக்களின் ஆதரவை வாபஸ் பெற்றார். அதே போல தனி தெலுங்கான கோரி வரும் டி.ஆர்.எஸ். வசம் இப்போது 3 எம்பிக்கள் உள்ளனர். இவர்களது ஆதரவும் காங்கிரசுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
இதனால் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றவுடன் மத்திய அரசு மீது பாஜக கூட்டணி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம். அப்படிப்பட்ட நிலையில் முலாயமின் கட்சி ஆதரித்து வாக்களில்லாம் அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடு நிலை வகிக்கலாம்.
இதில் எதைச் செய்தாலும் பாஜக கூட்டணி கொண்டு வரும் தீர்மானம் தோற்கும் என்பது குறிப்பிடத்தக்ககது. அந்த வகையிலும் அரசு தப்பலாம், ஆனால் பின்னர் மெஜாரிட்டியை நிரூபித்தே ஆக வேண்டும்.
இந் நிலையில் இன்று நாடு திரும்பும் அமர் சி்ங்குக்கும், முலாயம் சிங்குக்கும் அணு ஒப்பந்தத்தின் பலன்கள் குறித்து விளக்கவுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்.
காங்கிரஸை முலாயம் சிங் ஆதரிப்பதை இடதுசாரிகள் ரசிக்கவில்லை. தனது கோபத்தை நேரடியாகவே முலாயமிடம் காட்டினார் மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்.
ஆனால், மாயாவதியை ஒடுக்கவும், பாஜக-மாயாவதி இடையே புதிய நட்புறவு துளிர்க்க ஆரம்பித்துள்ளதாலும் தான், காங்கிரசுடன் கைகோர்க்க முடிவு செய்ததாக இடதுசாரிகளிடம் விளக்கியுள்ளார் முலாயம்.
இந்த ஆதரவு ஒட்டுமொத்தமாக இருக்காது என்றும், பிரச்சனை அடிப்படையில் தான் ஆதரிக்கப் போவதாகவும் முலயாம் சி்ங் கூறியதாக இடதுசாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில் முலாயம் சிங் இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் (மூன்றாம் அணி) கூட்டம் நாளை கூடுகிறது. அதில் தனது நிலையை முலாயம் விளக்குவார். இதையடுத்து சமாஜ்வாடி கட்சியை கூட்டணியில் தொடர விடுவதா அல்லது கழற்றிவிடுவதா என்பது குறித்து சந்திரபாபு நாயுடு, செளதாலா உள்ளிட்ட மூன்றாவது அணித் தலைவர்கள் முடிவு செய்வர்.












Click it and Unblock the Notifications