ராஜபக்சே செல்லவிருந்த ஹெலிகாப்டர் மீது புலிகள் தாக்குதல்

இலங்கையில் ராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இரு தரப்பும் பெரும் சேதத்தை சந்தித்து வரும் நிலையில் அதிபர் ராஜபக்சே பயணிக்கவிருந்த ஹெலிகாப்டரை விடுதலைப் புலிகள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று பிற்பகல் இச்சம்பவம் நடந்துள்ளது. அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் அதிபர் ராஜபக்சே சென்றிருந்தார்.
பாலத்தினை திறந்து வைத்து ராஜபக்சே உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பிற்பகல் 1 மணியளவில் பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து ராஜபக்சேவை அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று சம்பவ இடத்திற்கு விைரந்தது. அந்த ஹெலிகாப்டர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதி மீது ஹெலிகாப்டர் பறந்தபோது இந்தத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டனர். இதில் ஹெலிகாப்டர் பலத்த சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து விமானப்படை ஜெய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா கூறுகையில், அதிபர் ராஜபக்சேவின் பயணத்திற்காக சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கபப்ட்டுள்ளது.
நிலத்திலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஹெலிகாப்டரின் எரிபொருள் கலம் உள்ள பகுதி சேதமடைந்தது. முதலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக நினைத்தோம். ஆனால் தாக்குதல் காரணமாகவே தரையிறக்கப்பட்டதாக பின்னர் தெரிய வந்தது.
அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் அதிபர் அப்போது பயணிக்கவில்லை. அவர் இருக்கலாம் என்று நினைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 விமானப் படையினர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications