செங்கோட்டை அருகே மர தடி விழுந்து 2 பேர் பலி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே மர தடி விழுந்து 2 பேர் பலியானார்கள்.
செங்கோட்டை அருகேயுள்ள பிரானூர் பார்டரில் நூற்றுக்கும் மேற்பட்ட மர தடிகள் அறுக்கும் ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகளில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஒரு லாரியில் ஏராளமான மரத்தடிகள் பிரானூர் பார்டரில் உள்ள காளிதாஸ் என்பவரது மர அறுவை ஆலைக்கு கொண்டு வரப்பட்டு அதனை இறக்கும் பணியில் கொட்டாகுளம் ராமர், பிரானூர் பார்டரை சேர்ந்த ராஜ், காஜா, முருகைய்யா உள்ளிட்ட பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாரவிதமாக மரத்தடி சரிந்து விழுந்ததில் ராமர் (57), பால்ராஜ் (56), ஆகிய இரு தொழிலாளிகள் தடிக்குள் சிக்கி பலியாகினர். மேலும் காஜா, முருகையா ஆகிய தொழிலாளர்கள் காயம் ஏற்பட்டு உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications