'வசூல் ராஜாக்கள்' ஆன ஆட்டோ டிரைவர்கள்!
சென்னை: பெட்ரோல் பற்றாக்குறையால், இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாமல் ஆட்டோக்களை நாடி வரும் அப்பாவி ஜனங்களிடம் பல ஆட்டோ டிரைவர்கள் இஷ்டத்திற்கு வசூல் செய்து 'எரியும் நெருப்பில் எண்ணையை' ஊற்றி வருகின்றனர்.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் இல்லாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
பல இருசக்கர வாகன தாரர்கள் பெட்ரோல் இல்லாததால், ஆட்டோக்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் அலுவலகங்களுக்கும், பிற வேலைகளுக்கும் போய் வருகின்றனர்.
ஆனால் ஓடிக் கொண்டிருக்கும் ஆட்டோக்கள், அட்டைகள் போல மாறி மக்களிடம் பணத்தைப் பிடுங்கும் வேலையில் படு ஜோராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
வழக்கமாக வசூலிப்பதை விட அதிக அளவிலான கட்டணத்தை இவர்கள் கேட்கின்றனர். கொடுக்க மறுத்து பேரம் பேசுவோரை கண்டு கொள்ளாமல் பணத்தைக் கொட்டி அழ தயாராக இருப்பவர்களை பார்த்துப் போய் விடுகிறார்கள்.
நாங்களே அதிக விலை கொடுத்து பெட்ரோலை கருப்புச் சந்தையில் வாங்கி ஓட்டுகிறோம். எனவே கூடுதலாக கொடுத்துதான் ஆகவேண்டும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் கள்ளச் சந்தையில் பெட்ரோல், டீசலை விற்பதே சில ஆட்டோக்காரர்கள்தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
புறநகர்ப் பகுதி மக்கள்தான் இந்த ஆட்டோக்காரர்களின் வேட்டையில் சிக்கி வெந்து கொண்டிருக்கிறார்கள். பல புறநகர்ப் பகுதிகள் முக்கியச் சாலைகளிலிருந்து வெகு தூரத்திற்கு உள்ளடங்கி இருப்பதால் இரு சக்கர வாகனங்கள் அல்லது ஆட்டோவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இதில் பைக், மொபட் இல்லாதவர்கள் நிலைமை அதோ கதியாகியுள்ளது. ஆட்டோக்காரர்கள் கேட்கும் தொகையை அழுது விட்டு போக வேண்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் பஞ்சம் விரைவில் தீர்ந்தால்தான் நமக்கெல்லாம் விடிவுகாலம் என ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் பொதுமக்கள்.
ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை:
இதற்கிடையே டீசல் பற்றாக்குறை காரணமாக, சென்னையில் பல இடங்களில் ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்கள் மாநகர பஸ்களையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஸ்கூல் வேன்-ஆட்டோக்கள் நிறுத்தம்:
மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இயக்கப்படும் வாகனங்களும் டீசல் தட்டுப்பாடு காரணமாக அவை முழு அளவில் இயங்கவில்லை. இதனால் குழந்தைகளை தங்களது சொந்த வாகனங்களிலேயே பெற்றோர் அழைத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பல குடும்பங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கே அனுப்பவில்லை.












Click it and Unblock the Notifications