பஸ்-ரயில்கள் மூலம் காய்கறிகள்-பால் அனுப்ப கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
சென்னை: லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசு பஸ்கள், ரயில் மூலம் அனுப்ப நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சரக்கு- டேங்கர் லாரிகள், வேன்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் காய்கறி, பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதிலும், வினியோகிப்பதிலும் சி்க்கல் உருவாகியுள்ளது.
இதனால் இந்தப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பொருட்களை வினியோகிக்க அரசு பஸ்களையும், ரயில்களையும் பயன்படுத்துமாறு அவர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நேற்று இரவு முதல் வேலை நிறுத்தம் செய்வதாக லாரி போக்குவரத்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால், பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய பொருள்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து கிடைத்திட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
காய்கறி மற்றும் பால் போன்ற அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் மற்றும் ரயில் மூலமாகவும் கொணர ஏற்பாடுகளை செய்யுமாறும் அதற்கு தக்க பாதுகாப்பு கொடுக்குமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications