நல்லாட்சி செய்யாவிட்டால் எங்களுக்கு வழி விடுங்கள்: கார்த்திக்
மதுரை: ஆட்சியாளர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால் எங்களுக்கு வழி விட்டு விலகிக் கொள்ள வேண்டும் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரை வந்த கார்த்திக் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் மக்கள் பிரச்னைகளை மையமாக வைத்து போராட்டம் நடத்துவோம். தமிழகம் போர்க் களமாக மாறியுள்ளது.
பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிரச்னைகளை தீர்க்காமல் அரசு தாமதம் செய்கிறது.
எந்த நிலையிலும் மக்கள் உரிமைக்காக போராடுவோம். புதிய கூட்டணி உருவாக்குவோம். நிச்சயம் அது புதிய தலைமுறைக்கு புதிய சக்தியாக அமையும். மக்களுக்கு நல்லது செய்ய இது நல்ல தருணம் என்றார்.
பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் கார்த்திக். அப்போது அவர் பேசுகையில், நான் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். சிலர் என் முதுகில் குத்தினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவ்வாறு குத்தாமல் இருந்தால் புதிய கட்சி துவக்கியிருக்க மாட்டேன்.
விலைவாசி உயர்வு,பணவீக்கம் அதிகரிப்பு சில மாதங்களில் சரியாகிவிடும் என்கின்றனர். அதை சொல்வதற்காகவா ஆட்சியாளர்கள் உள்ளனர். மக்கள் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். அரசின் அணுகுமுறைமக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தயவு செய்து எங்களுக்கு வழிவிடுங்கள் என்றார்.
தனது கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை இன்று மாலை வெளியிடுகிறார் கார்த்திக்.