தனது கல்லூரி மாணவர்களுக்கு விஜய்காந்த் பணம் கட்டுவாரா?-பொன்முடி
விழுப்புரம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடத்தும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவரே பணம் கட்டுவாரா என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பினார்.
விழுப்புரம் மாவட்ட திமுகவினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பொன்முடி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
திமுக கூட்டணியில் இருந்து பாமகவை வெளியேற்றியதை அனைவரும் வரவேற்கின்றனர். காவல்துறையை ஏவி தேமுதிகவினர் மீதுபொய் வழக்கு போடுவதாக என் மீது குற்றம் சாட்டியுள்ளனர். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்ன வியாபாரம் செய்கிறார் என்று ஊருக்கே தெரியும். அவர்கள் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது அவர்களுக்கே தெரியும்.
நேர்மையாக இருந்தால் ஏன் பயந்து ஓடவேண்டும். காவல் துறை தனது பணியைசெய்கிறது. அவர்களை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. காவல்துறை தலையாட்டி பொம்மையாக இல்லை.
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில், இந்தாண்டே பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கி கடனுக்கு பதிலாக அரசே பணம் கட்டவேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவரே பணம் கட்டட்டும். அக்கல்லூரிக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும். தமிழகத்தில் 278 கல்லூரிகள் உள்ளன.
கல்லூரியை நிர்வாகம் செய்ய தெரியாதவர்களுக்கு என்ன தெரியும். லாஜிக் இல்லாமல், உளறுபவர்களுக்கு எல்லாம் பதில் தர முடியாது என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications