8 மில்லியன் வேலை வாய்ப்புகள்!-கலக்கபோகும் திருச்சி, சேலம், மதுரை, கோவை!!
8 மில்லியன் வேலை வாய்ப்புகள்!-கலக்கபோகும் திருச்சி, சேலம், மதுரை, கோவை!!
சென்னை: அடுத்த 5 ஆண்டுகளில் பிபிஓ மற்றும் ஐடி துறையில் இந்தியா 10 முதல் 15 சதவிகித வளர்ச்சியை எட்டும் என நாஸ்காம் (NASSCOM) தெரிவித்துள்ளது. இதன் மூலம் மேலும் எட்டு மில்லியன் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உள்ளதாக இந்த அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய பிபிஓ அற்றும் ஐடி நிறுவனங்களின் வர்த்தக சபையாகத் திகழும் நாஸ்காம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை மேற்கொண்டுள்ளது. அதில் நாடு முழுவதிலுமுள்ள 50க்கும் மேற்பட்ட நகரங்களில் கம்ப்யூட்டர் மற்றும் அவுட் ஸோர்ஸிங் நிறுவனங்கள் பெருமளவு கால்பதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும், அதற்கு ஏதுவாக அந்தந்த மாநில அரசுகள் உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது ஐடி நகரங்கள் எனப்படும் சென்னை, பெங்களூர், டெல்லி, ஐதராபாத், புனே, மும்பை போன்றவை எதிர்காலத்தில் பெருகும் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியைத் தாக்குப் பிடிப்பது சந்தேகம். எனவே புதிய நகரங்கள் உருவாக்கப்படுவது அவசியம் என்கிறார் நாஸ்காம் தலைவர் சோம் விட்டல்.
தமிழகத்தில் திருச்சி, சேலம், மதுரை, கோவை போன்ற பகுதிகளில்தான் இனி ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்கள் அதிகம் வரவிருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னைக்கு இணையான வளர்ச்சியை இந்த நகரங்களும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் எட்டி விடுமாம்.
இனி சினிமாவில் மதுரைவாசிகளை வீச்சரிவாளும் வேல்கம்புமாக காட்ட முடியாது. அவங்கதான் ஐடிக்கு மாறப் போறாங்களே...