விலைவாசி உயர்வு: கருணாநிதி மீது ஜெ. பாய்ச்சல்
சென்னை: தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாதது, லாரிகள் ஸ்டிரைக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டு வராததற்கு, முதல்வர் கருணாநிதியின் அலட்சியப் போக்கே காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
1.7.2008 அன்று இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகமே பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் திண்டாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்திற்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வரவில்லை.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல், ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல தமது திரைப்படத்தை கண்டு களித்து இருக்கிறார் கருணாநிதி.
தமிழக மக்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதலமைச்சர் கருணாநிதி கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றது நாகரீகமற்ற செயல். கருணாநிதியின் இந்த மக்கள் விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
மின்சார வெட்டு, சட்டம்ஒழுங்கு சீர்கேடு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, விண்ணை முட்டும் விலைவாசி என மக்கள் கண்ணை கசக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் 1.7.2008 அன்று இரவு முதல் லாரிகள் ஓடாதது மேலும் மக்களை நிலைகுலைய வைத்தது. அனைத்துப் பொருட்களின் விலையும் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டு விட்டன.
மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு கண்டிருந்தால் 20 விழுக்காடு அளவிற்கு பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருக்காது; பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டிருக்காது.
முன்பே பேச்சுவார்த்தை உடன்பாடு கண்டிருந்தால் 20 சதவீத விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்காது. பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்காது.
மத்திய அரசுக்கு வழிகாட்டியாக திகழ்வதாக கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதிக்கு நாட்டு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால், உளியின் ஓசை திரைப்பட சிறப்புக் காட்சியை நிறுத்தி வைத்து விட்டு லாரிகள் ஸ்டிரைக்கிற்கு அன்றைக்கே முடிவு கட்டியிருக்க முயற்சித்திருக்க வேண்டும்.
எனவே உயர்த்தப்பட்ட பொருட்களின் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications