சிவசேனா-கெளடா-அஜீத்சிங் ஆதரவு: அரசு தப்பிவிடும்!
டெல்லி: மத்திய அரசுக்கு இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் உயர்மட்டக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டில் கூட்டப்பட்டுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தேவையான எம்பிக்களின் ஆதரவைத் திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
காங்கிரசுக்கு சிவ சேனாவின் 13 எம்பிக்களின் ஆதரவும் தேவ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 3 எம்பிக்களின் ஆதரவும் கிடைத்துவிட்டது.
அதே போல 3 எம்பிக்கள் கொண்ட அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளமும் காங்கிரசுக்கு ஆதரவு தர முன் வந்தள்ளது.
இந் நிலையி்ல் மத்திய அரசை ஆதரித்து வாக்களிப்போம் என சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஒரு முறை இன்று தெளிவாக அறிவித்துவிட்டது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்காவுடனான மத்திய அரசின் அணுசக்தி ஒப்பந்தத்தை சமாஜ்வாடி கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. ஒருவேளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டால் எங்கள் கட்சியின் 39 எம்பிக்களும் காங்கிரஸ் அரசை முழுமையாக அதரிப்பார்கள். அதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை.
எங்கள் கட்சியின் சில எம்பிக்களுக்கு இதில் தயக்கமிருப்பதாக வரும் செய்திகள் பொய்யானவை, எதிரிகளால் பரப்பப்படுபவை, என்றார்.
தேவ கெளடா கூறுகையில், மதவாத பாஜகவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களுக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் கிடையாது.
மத்தியில் காங்கிரஸ் என்ற மதசார்பற்ற கட்சி ஆட்சியிலிருக்க வேண்டும். எங்களை முதுகில் குத்திய பாஜகவுக்கு எதிரான எல்லா நடவடிக்கையிலும் நாங்கள் இருப்போம் என்றார்.
இந் நிலையில், தங்களுக்கு அகாலி தளம் கட்சியின் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கூறினாலும் அதை அகாலி தளம் மறுத்துள்ளது. தாங்கள் பாஜக கூட்டணியிலேயே உள்ளதாகவும் மத்திய அரசை எதிர்த்து வாக்களிக்கப் போவதாகவும் அந்தக் கட்சி இன்று அறிவித்துவிட்டது.
சமாஜ்வாடியின் 39 எம்பிக்கள், சிவ சேனையி்ன் 13 எம்பிக்கள், அஜித் சிங், கெளாடாவின் 6 எம்பிக்கள் ஆதரவு கிடைத்துவிட்டதால் (மொத்தம் 58) மத்திய அரசு லோக்சபாவில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துவிட முடியும் என்றே தெரிகிறது.
இடதுசாரிகளிடம் 59 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு வாரத்தில் லோக்சபா கூடும்?:
எனவே மத்திய அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்றக் கூட்டம் இன்னும் ஒரு வாரத்தில் கூட்டப்படும் எனவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications