முலாயம் முடிவில் அதிருப்தி-சமாஜ்வாடி உடைகிறது?
டெல்லி: இடதுசாரிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றுள்ள நிலையில் சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் நம்பிக்கை வாக்குக்கு எதிராக வாக்ளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முலாயம் சிங்கின் முடிவு தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக 2 எம்.பிக்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர். தங்களைப் போல மேலும் 10 எம்.பிக்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும், லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரப்பட்டால் அதற்கு எதிராக தாங்கள் வாக்களிப்போம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் 12 பேரும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு தாவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களில் முக்கியமானவர் ஜெயப்பிரகாஷ். இவர் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர். தனது அதிருப்தி குறித்து ஜெயப்பிரகாஷ் கூறுகையில், 12 எம்.பிக்கள் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக உள்ளனர். எங்களது கருத்தை அறியாமல் முலாயம் சிங் முடிவெடுத்து அறிவித்து விட்டார்.
இன்று நடந்த நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திலேயே எங்களது அதிருப்தியைத் தெரிவித்தோம் என்றார்.
இவரைப் போலவே முன்னவர் ஹசன் என்ற எம்.பியும் வெளிப்படையாக அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
39 உறுப்பினர்கள் சமாஜ்வாடிக்கு இருந்தாலும் கூட ராஜ்பாப்பர், பேனி பிரசாத் வர்மா ஆகியோர் ஏற்னவே கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டனர். அதிக் அகமது, அப்சல் அன்சாரி ஆகியோர் சிறையில் உள்ளனர்.
தற்போது முன்னவர் ஹசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் புரட்சிக் குரல் எழுப்பியுள்ளனர். எனவே சமாஜ்வாடியின் உண்மையான பலம் 33 தான் வருகிறது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தால் சமாஜ்வாடி பெரும் சங்கடத்திலும், காங்கிரஸ் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளன.












Click it and Unblock the Notifications