தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம்: எஸ்.ஐ. உட்பட 3 பேர் சிக்கினர்?
சென்னை: தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் தொலைபேசி பேச்சு ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஊழியர் உள்பட 3 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன்பு தலைமைச் செயலாளர் திரிபாதியும், லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை இயக்குநர் உபாத்யாவும் பேசிய தொலைபேசி பேச்சு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. மேலும் உளவுத்துறை டிஐஜி சங்கர் ஜூவால் தலைமையில் விசாரணையும் தொடங்கியது. லஞ்ச ஒழிப்புப் பிரிவில் சோதனையும் நடத்தப்பட்டது.
இந்த விசாரணை மற்றும் சோதனையின்போது உபாத்யா தனக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் கம்ப்யூட்டர் உதவியுடன் பதிவு செய்வது வழக்கம். அப்படி பதிவு செய்யப்பட்ட சிடியை யாரோ சிலர் வெளியே கொண்டு சென்று விட்டனர் என்று தெரிய வந்தது.
மேலும் சிடி வெளியேறிய விவகாரத்தில் உபாத்யாவுக்கு தொடர்பில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவரது அறைக்கு வந்து செல்வோர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அப்போது, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகர், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஒரு அமைச்சுப் பணியாளர் ஆகியோர் அடிக்கடி வந்து செல்வார்கள் என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அமைச்சுப் பணியாளர் மீது சந்தேகம் வலுத்துள்ளது. அவரது வங்கிக் கணக்குகளை சோதித்தபோது ஏராளமான பணம் போடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்தப் பணம் எங்கிருந்து இவருக்கு வந்தது என்றும் விசாரணை நடக்கிறது.
பணதுக்காக அவர்தான் சிடியை வெளியே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று போலீஸார் கருதுகின்றனர்.
அவர் மீது சிடியை விற்றது தொடர்பாகவும், மற்ற இருவர் மீதும் அலட்சியமாக இருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்ய போலீஸார் தீர்மானித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications