காந்தியின் தமிழ் கையெழுத்தை பாதுகாத்தவர் தீக்குளிப்பு
தாம்பரம்: மகாத்மா காந்தி தமிழில் போட்டுக் கொடுத்த கையெழுத்தை 70 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைத்திருந்தவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீத்தாபதி நாயுடு (வயது 84). இவரது மனைவி இறந்து விட்டார். 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இளைய மகன் ஸ்ரீபதி வீட்டில் தங்கி இருந்தார்.
சீத்தாபதி நாயுடுவின் சொந்த ஊர் நாகப்பட்டினம். அங்கு செல்வந்தராக வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 1938-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக மகாத்மா காந்தி அடிகள் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிதி திரட்டினார்.
22.2.1938 அன்று நாகப்பட்டினம் அவுரி திடலுக்கு நிதி திரட்ட வந்த காந்தி அடிகளிடம், அப்போது 13 வயது சிறுவனாக இருந்த சீத்தாபதி நாயுடு தனது தந்தையுடன் சென்று பூகம்ப நிதியாக 5 ரூபாய் வழங்கினார். அவரது உதவும் தன்மையை பாராட்டிய காந்தி அடிகள், ஒரு சிறிய வெள்ளைத்தாளில் காந்தி' என தமிழ் மற்றும் இந்தியில் கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
அந்த கையெழுத்தை சீத்தாபதி நாயுடு பொக்கிஷமாக கருதி வெள்ளிப் பேழையில் வைத்துப் பாதுகாத்து வந்தார். பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்து குரோம்பேட்டையில் தங்கிய சீத்தாபதி நாயுடு, காந்தி கையெழுத்து போட்டுக் கொடுத்த பேப்பரை தன் வாழ்நாளுக்கு பின்பும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த மே மாதம் 23-ந்தேதி சென்னை அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார்.
தீக்குளித்து தற்கொலை:
இதற்கிடையே வயது முதிர்ந்த நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று அவர் அடிக்கடி கூறி வருவாராம்.
இந்தநிலையில் சீத்தாபதி நாயுடு நேற்று மதியம் வீட்டின் காம்பவுண்டு அருகே மண்எண்ணையை உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல்கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் நேற்று மாலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
சிட்லப்பாக்கம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications