திமுக இல்லாத காங். கூட்டணி ஓகே-ராமதாஸ்
ராமநாதபுரம்: வரும் மக்களவைத் தேர்தலில் திமுக இல்லாத காங்கிரஸ் தலைமை வகிக்கும் கூட்டணி ஏற்பட்டால் அதில் நாங்கள் இடம் பெறுவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக மகளிர் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் மது ஒழிப்பு மாவட்ட மாநாடு நடந்தது.
அதில் ராமதாஸ் பேசுகையில், இந்த மாநாடு நடத்துவதின் நோக்கமே தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இல்லாத ஊர், நகர் உருவாக வேண்டும் என்பதுதான். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் இருந்த காலத்தை விட தற்போதுதான் கள்ளச் சாராயமும் விஷ சாராயமும் அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டு காலத்தில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலை ஏற்படும் என்கிறார்கள்.
கள்ளச் சாராயம் ஒழிக்கப்படும் என தமிழக முதல்வர் கூறுவது பச்சை பொய் வாதம். எத்தனை இலவசங்கள் கொடுத்தாலும் குடி விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை பெண்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
மது விற்பனையை அரசு ஊக்குவிக்க கூடாது என அரசியல் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. ஆனால் இங்கு டார்கெட் வைத்து விற்கிறார்கள்.
மதுபான விற்பனையில் தர்மபுரி, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் உட்பட 8 மாவட்டங்கள் முன்னணியில் உள்ளன. ஆனால் இந்த எட்டு மாவட்டங்களும் பொருளாதாரம், தனிநபர் வருமானம், மனித வள மேம்பாடு, விவசாயம் ஆகியவற்றில் கடைசி நிலையில் உள்ளன. குடிக்கும் வாழ்க்கைத் தரத்துக்கும் நேரடியான தொடர்புள்ளது.
மது விற்பனையை ஊக்கப்படுத்த டாஸ்மாக் கடைகளுக்கு அரசு டார்கெட் வைப்பதை எதிர்த்து பாமக சார்பில் வழக்கு தொடர உள்ளோம்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடி என கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. மீனவர் பிரச்சனைகள் குறித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதி திருப்தி அடைகிறார்.
இவரது ஆலோசனையில்தான் மத்திய அரசு இயங்குகிறது என கூறிகிறார்களே, இதற்கு மட்டும் ஆலோசனை கூறமாட்டாரா?
இரண்டு நாள் டெல்லியில் முகாமிட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரை சந்தித்து இனி இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டால் சும்மா இருக்க மாட்டோம் என அறிவித்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
திருப்பூரில் நடந்த பஸ் எரிப்பு சம்பவத்தில் பாமகவினர் ஈடுபடவில்லை. திமுகவினரே செய்துவிட்டு எங்கள் மேல் பழியை போடுகின்றனர். இது அவர்களுக்கு கைவந்த கலை.
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக இல்லாத காங்கிரஸ் தலைமை வகிக்கும் கூட்டணி வந்தால் அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றார் ராமதாஸ்.