குழப்பும் கட்சிகள்: கலக்கத்தில் காங். - கிடைப்பவர்களை இழுக்க முயற்சி
டெல்லி: மத்திய அரசுக்கு ஆதரவு தருவது தொடர்பாக உறுதியான உத்தரவாதத்தை அளிக்காமல் தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம், அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம், தெலுங்கானா ராஷ்டிரிய கட்சி ஆகியவை குழப்பி வருவதால், கிடைக்கும் எம்.பிக்களை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணிக்கு சமாஜ்வாடி கட்சி ஆதரவு அளிப்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிக்கு 39 பேர் உள்ளனர். ஆனால் இங்கு பெரிய குழப்பம் உள்ளது. 39 பேரும் தற்போது முலாயம் சிங்குடன் இல்லை. 2 பேர் மீது கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில எம்.பிக்கள் முலாயமுக்கு எதிராக பேசி வருகின்றனர். மறுபக்கம் மாயாவதி சிலரை இழுக்க முயற்சி மேற்கொண்டுள்ளார்.
எனவே 39 பேரும் ஒட்டுக்காக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என முலாயம் சிங் யாதவே உறுதியாக கூற முடியாத நிலை.
மறுபக்கம், தலா 3 எம்.பிக்களுடன் உள்ள கெளடா, அஜீத் சிங், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவை தங்களது உறுதியான ஆதரவை இதுவரை தெரிவிக்கவில்லை. மூன்று கட்சிகளுமே காங்கிரஸிடமிருந்து பெரும் லாபத்ைத எதிர்பார்ப்பதால் இதில் இழுபறி நிலவுகிறது.
முதலில் அஜீத் சிங், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தனது ஆதரவை ஆணித்தரமாக உறுதிப்படுத்த அஜீத் சிங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காங்கிரஸுக்கு ஆதரவு தருவது குறித்த முடிவை அவசரப்பட்டு எடுக்க நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை அணு சக்தி ஒப்பந்தம் முக்கியமானதல்ல. காரணம் தேர்தல் விரைவாக வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து எனது கட்சியினருடன் நான் விவாதிக்க வேண்டும். அதன் பிறகே நான் எந்த முடிவையும் எடுக்க முடியும்.
இதை விட முக்கியமாக, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே அணு சக்தி ஒப்பந்தம்தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனவே மன்மோகன் சிங் அரசு கவிழும் சூழ்நிலை உள்ளது என்பதை மறுக்க முடியாது.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அணு சக்தி ஒப்பந்தத்தை நான் ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக மாற்று 6எரிபொருட்கள் குறித்து அரசு யோசிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தனது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிறகே மற்ற கட்சிகளின் முடிவுகள் முக்கியத்துவம் பெறும் என்றார் அஜீத் சிங்.
கிடைத்தவர்களை இழுக்க காங். முயற்சி:
இதன் காரணமாக சுயேச்சைகள், ஒரு எம்.பிக்களுடன் உள்ள கட்சிகள் ஆகியோரை இழுக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. யார் கிடைத்தாலும் ஓ.கே. என்ற நிலையில் காங்கிரஸ் தற்போது உள்ளது.
ஆதரவு தர என்ன கோரிக்கை விடுத்தாலும் அதை ஏற்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளதாம்.
இதன் பலனாக லடாக் தொகுதி சுயேச்சை எம்.பி. தப்ஸ்டன் செவாங், காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல, அஸ்ஸாம் மாநில சுயேச்சை எம்.பியான எஸ்.கே.விஸ்முத்யாரி என்பவரும் காங்கிரஸுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.
இதேபோல மேலும் சில சுயேச்சைகள், ஒரு எம்.பிக்களுடன் உள்ள கட்சிகளை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு எம்.பியும் படு முக்கியத்துவம் வாய்ந்தவராக மாறியுள்ளார்.
--












Click it and Unblock the Notifications