பொரியலுக்காக கைதிகள் பயங்கர மோதல்!!
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் நேற்று பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
பாளை மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 1,800 பேர் உள்ளனர். மதியம் கைதிகள் புருஸ்லி பிரபு உள்பட 5 பேர் வெளிச் சிறை இரண்டாவது பிரிவிலுள்ள விசாரணை கைதிகளுக்கு உணவு மற்றும் உருளை கிழங்கு பொறியல் வழங்கினர்.
மேலப்பாளையத்தை சேர்ந்த விசாரணை கைதி பஷீர், அதே பகுதியை சேர்ந்த குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதான காஜா, தூத்துக்குடியை சேர்ந்த கஞ்சா வியாபாரி ஜெயக்குமார் உள்பட 6 கைதிகளுக்கு உணவு மற்றும் உருளைகிழங்கு பொறியல் குறைவாக இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் உணவு சப்ளை செய்த கைதிகளான புருஸ்லி பிரபு, ராமச்சந்திரன், செல்வம் உள்பட 5 பேரை தாக்கினர். பதிலுக்கு அவர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் ஆதரவாக 15-க்கும் மேற்பட்ட கைதிகள் மோதலில் இறங்கினர். உணவு பாத்திரங்கள் தூக்கி வீசினர். இதையறிந்து அங்கு வந்த ஜெயிலர் நிஜாமுதீன், அதிகாரிகள் மற்றும் வார்டன்கள் கைதிகள் மீது தடியடி நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தனர். மோதலுக்கு காரணமான பஷீர், காஜா, ஜெயகுமார் ஆகியோர் தனி அறையில் அடைக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 4-ம் தேதி நாகர்கோவில் மற்றும் மதுரை கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.