அப்புவின் பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க உத்தரவு
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் அப்பு, மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளார். இதையடுத்து அவரது பாஸ்போர்ட்டை அவரிடம் வழங்குமாறு புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கொலையாளிகளை ஏற்பாடு செய்து கொடுத்த கூலிப்படைத் தலைவராக அப்பு செயல்பட்டார் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்பு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கைது செய்யப்படுவதற்கு முன்பு அமெரிக்காவில் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன். தற்போது அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளேன். எனவே எனது பாஸ்போர்ட்டை வழங்குமாறு புதுச்சேரி கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம், புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றம், அப்புவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடனோ அல்லது நான்கு மாதங்களுக்குள்ளாகவோ அப்பு பாஸ்போர்ட்டை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.