சோனியாவை இன்று சந்திக்கிறார் முகேஷ் அம்பானி
டெல்லி: நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பாக தம்பி அனில் அம்பானியுடன் கடுமையாக மோதி வரும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார்.
அனில் அம்பானிக்கு சமாஜ்வாடி கட்சி பெரும் ஆதரவாக உள்ளது. இது முகேஷ் அம்பானிக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் அனிலை ஆதரிக்கும் சமாஜ்வாடிக்கு பெரும் நெருக்கடிையக் கொடுக்கும் வகையில், சமாஜ்வாடிக் கட்சியையே உடைக்கும் வேலையில் முகேஷ் அம்பானி இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து சோனியா காந்தியின் கவனத்திற்கு சமாஜ்வாடி கட்சி கொண்டு சென்றது. முகேஷ் அம்பானி சோனியா காந்தியின் தீவிர ஆதரவாளர் என்பதால் இதில் சோனியா தலையிட வேண்டும் என சமாஜ்வாடி கோரியது.
ஆனால் சோனியா தவறாக நினைத்தாலும் சரி, அனில் அம்பானிக்கு ஆதரவாக செயல்படும் சமாஜ்வாடிக் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்ற வேகத்தில் முகேஷ் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், நேற்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை முகேஷ் அம்பானி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.
பின்னர் அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகரையும் முகேஷ் சந்தித்துப் பேசினார்.
மாலையில் அவர் சோனியாவை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் நேற்று முகேஷ் சோனியாவை சந்திக்கவில்லை. மாறாக இன்று சோனியா காந்தியை அவர் சந்தித்துப் பேசுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது அம்பானி சகோதரர்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக சோனியா முகேஷுக்கு அறிவுரைகள் கூறக் கூடும் என தெரிகிறது.