அன்புமணி தலைமையில் பாமக எம்.எல்.ஏக்கள் டெல்லி பயணம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 21 பாமக எம்எல்ஏக்கள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
பாமகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காடுவெட்டி குரு, வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கூறி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதற்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்தது. அவர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து தமிழக அரசு மீது மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார்.
அதன்படி, தமிழகம், புதுவையை சேர்ந்த கட்சியின் 21 எம்எல்ஏக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னிய சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் முறைகேடாக கைது செய்யப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசிடம் நீதி கேட்பதற்காக செல்கிறோம்.
பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் ஆகியோரை சந்தித்து தமிழக அரசின் நடவடிக்கை குறித்து விளக்கி கூறவுள்ளோம் என்றார்.