நளினிக்கு விடுதலை கிடைக்குமா?-இன்று தீர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் கடந்த மார்ச் மாதம் நளினியை பிரியங்கா வேலூர் சிறைஇல் சந்தித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகளை கடந்தும் சிறையில் உள்ளதால் என்னை விடுதலை செய்ய வேண்டும்.
என்னை விடுதலை செய்ய மறுத்த ஆலோசனை கமிட்டியின் உத்தரவையும் தமிழக அரசின் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வி.எஸ்.நாகமுத்து முன்னிலையில் நடந்து வருகிறது.
இதற்கிடையே நளினியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நளினியை விடுதலை செய்வதன் மூலம் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.
ஆயுள் தண்டனை காலம் என்பது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது தான். நளினியை, பிரியங்கா சந்தித்திருப்பதன் மூலம் மத்திய-மாநில அரசுகள் நளினி விடுதலை செய்வதற்கு உதவி செய்யக் கூடும் என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது.
எனவே இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக் கொண்டு தனது கருத்துக்களையும் பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.
சுவாமியின் மனு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி, அரசு வழக்கறிஞர் அருண், நளினி தரப்பில் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன்,
சுவாமி தரப்பில் ஜி.ராஜகோபால், வெங்கட்ராமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் இந்த வழக்கில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications