நியூசிலாந்தில் 32 இந்திய கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மாயம்
மெல்போர்ன்: சிட்னியில் நடைபெறும் உலக இளைஞர் தின கொண்டாட்டத்தின் போது போப்பாண்டவரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த 32 இந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ யாத்ரீகர்கள், நியூசிலாந்தில் காணாமல் போய் விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தம் 220 இந்திய யாத்ரீகர்கள் ஒரு மாத கால விசாவில் ஆஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பயணத்தின் ஒரு கட்டமாக அவர்கள் நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் இறங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆக்லாந்திலிருந்து இன்று அவர்கள் சிட்னி செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களில் 32 பேரைக் காணவில்லை என நியூசிலாந்து குடியேற்றத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனதாக கூறப்படும் 32 பேரிடமும் முறையான விசா இருந்தாலும் கூட, அவர்கள் அனைவரும் நியூசிலாந்தை விட்டு குறித்த காலத்தில் வெளியேற வேண்டும் என்பதில் நியூசிலாந்து அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.
கடந்த நான்கு நாட்களில் இவர்கள் பகுதி பகுதியாக காணாமல் போயுள்ளனராம். இவர்கள் யாரும் தங்களது பாஸ்போர்ட்டை கையில் வைத்திருக்கவில்லை. உள்ளூர் கத்தோலிக்க சர்ச் வழங்கிய வீடுகளில் தங்கியிருந்தனர்.
காணாமல் போன இந்தியர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நியூசிலாந்து குடியேற்றத் துறை அதிகாரிகளும் கத்தோலிக்க சர்ச் உறுப்பினர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நியூசிலாந்து கத்தோலிக்க சர்ச் செய்தித்தொடர்பாளர் லின்ட்சே பிரீயர் கூறுகையில், கடந்த வாரம் அனைவரும் நியூசிலாந்து வந்தனர். உள்ளூர் சர்ச் இல்லங்களில் அவர்களுக்கு தங்கஅனுமதி அளிக்கப்பட்டது.
அவர்களில் 32 பேரை தற்போது காணவில்லை. அவர்கள் உண்மையான யாத்ரீகர்கள் இல்லை என்று கூற முடியாது. அனைவருமே, போப்பாண்டவரை சந்திக்கும் பயணத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்தான்.
ஆனால் அவர்கள் காணாமல் போயிருப்பது அசாதாராணமானது, ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்றார்.
சிட்னியில், இன்று உலக இளைஞர் தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. போப் 16ம் பெனடிக்ட் இதை தொடங்கி வைக்கிறார். உலகெங்கும் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் கலந்து கொள்ளத்தான் இந்தியக் குழுவினர் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications