எதிர்த்து ஓட்டு போடப் போகும் காங். எம்.பி.!
{image-Kuldeep Bishnoi250_16072008.jpg tamil.oneindia.com}சண்டீகர்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்பியான குல்தீப் பிஷ்னோய் மத்திய அரசு மீதான நம்பிக்கை தீ்ர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ளார். இவர் முன்னாள் ஹரியானா முதல்வர் பஜன் லாலின் மகன் ஆவார்.
ஹரியாணாவின் பிவானி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியான இவர், அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால், தரப்படவில்லை. இதனால் கட்சியை விமர்சித்து வந்தார். இதையடுத்து இவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஹரியாணா ஜான்ஹித் காங்கிரஸ் என்று ஒரு கட்சியையும் ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார்.
அவர் கூறுகையில், காங்கிரஸ் ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளை நான் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தேன். அவர்கள் செவி சாய்க்கவில்லை. இப்போது இந்த அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அரசியல் தற்கொலை செய்ய நான் விரும்பவில்லை. இதனால், நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து தான் வாக்களிக்கப் போகிறேன்.
நான் எம்பி பதவியை ராஜினாமா செய்து நெடு நாட்களாகிவிட்டது. ஆனால், அதை கட்சி இதுவரை ஏற்கவில்லை. இப்போது நான் எதிர்த்து வாக்களிக்கலாம் என்பதால் என்னை கட்சி பதவி நீக்க வாய்ப்புள்ளது என்றார்.
ஆனால், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் இவரை ஒழுங்கு கமிட்டி முன் ஆஜராகுமாறு காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், அதில் ஆஜராகாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 எம்பி தொகுதிகளில் 9 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன.