பூச்சாண்டிக்கு காங். பயப்படாது-இளங்கோவன்
சென்னை: சிவப்பு துண்டுக்கு சொந்தக்காரர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று அன்றே காமராஜர் உணர்ந்தார் என மத்திய இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். காமராஜரின் 106வது பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
அதில் இளங்கோவன் பேசுகையில்,
பெட்ரோல், டீசல் இல்லாவிட்டால் கார் பேட்டரியில் தான் ஓடும். அதற்கு மின்சாரம் வேண்டும். கியாஸ் அடுப்புக்கு மாற்று, மின்சார அடுப்புதான். இதற்கெல்லாம் அதிக மின் உற்பத்தி வேண்டும். அதற்கு அணுசக்தி ஒப்பந்தம் தேவை. நாம் எந்த நாட்டிற்கும் அடிமையாக இருக்கமாட்டோம். யாரையும் அடிமையாக்க முடியாது. கம்யூனிஸ்டுகள் மிரட்டுகிறார்கள் என்ன நியாயம்?.
சிவப்பு துண்டுக்கு சொந்தக்காரர்கள் நாட்டுப்பற்று இல்லாமல் இருப்பவர்கள் என்று அன்றே காமராஜர் உணர்ந்தார். கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் வளரக்கூடாது, முக்கிய இடம் கொடுக்கக்கூடாது, திராவிட இயக்கம் வளர்ந்தால் கூட பரவாயில்லை, நல்லது என்பதற்காக அல்ல, கம்யூனிஸ்டை விட பரவாயில்லை என்பதற்காக அப்படி செய்தார்.
பதவில் இருந்து தான் ஆகவேண்டும் என்று எண்ணியிருந்தால் அணு சக்தி ஒப்பந்தம் தேவையில்லை என்று கூறியிருப்போம். அது நாட்டுக்கு தேவை. மதவாத பாஜகவுடன் அவர்கள் கைகோர்த்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் குழப்பத்தின் உச்சகட்டத்தில் உள்ளனர். இந்த பூச்சாண்டிகளுக்கு காங்கிரஸ் பயப்படாது.
தமிழக கம்யூனிஸ்டு தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு, த.பாண்டியன் ஆகியோர் மீது எனக்கு மரியாதை உண்டு. அவர்கள் இருக்கும் இடம்தான் சரியில்லை. 22ம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் நாம் வெற்றிபெறுவோம். தற்போது காங்கிரஸ் கட்சியை தவிர எந்த கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை.
தொண்டரை காவு கொடுத்து வளரும் இயக்கம் அல்ல காங்கிரஸ். தலைவரை காவு கொடுத்து வாழும் இயக்கம். காமராஜரின் அடுத்த ஆண்டு பிறந்தநாளில் அரசியல் சூழ்நிலை மாறி இருக்கும் என்றார்.
வாசன்:
மத்திய அமைச்சர் வாசன் பேசுகையில்,
காமராஜர் ஆட்சியில் மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று ரூ.8,000 கோடி ஒதுக்கி மதிய உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. 13.9 கோடி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
பாஜக, இடதுசாரிகள் சேர்ந்து அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள். முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள். உங்கள் தடைகளை சோனியாகாந்தி தகர்ப்பார். 22ம் வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெல்லும். அடுத்த ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் வெல்லும் என்றார்.
தங்கபாலு:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில்,
காமராஜர் தத்துவத்தை சொன்னாலே காங்கிரஸ் வாழும். காங்கிரசை யாரும் வீழ்த்த முடியாது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி வரவேண்டும் என்றும் மக்களிடமும், தொண்டர்களிடமும் ஏக்கம் இருப்பதை இங்கிருக்கும் தலைவர்கள் அறிவார்கள். ஒன்றுபட்டு ஒரே மேடையில் நிற்கிறோம். கோஷ்டி, குழப்பம் உள்ளது என்று சொல்லவிட மாட்டோம். வாய்ப்பு தரமாட்டோம். எல்லா தலைவர்களும் சோனியாவின் தொண்டர்கள்தான்.
காங்கிரஸ் இனி அறையில் இருந்து அம்பலத்திற்கு வரும். தெருத் தெருவாக மக்கள் பிரச்சினையை முன்னிலைப்படுத்தும். தமிழக காங்கிரஸ் ஒன்றுமையோடு செயல்பட வேண்டும் என்று சோனியா நினைக்கிறார். ஒன்றுபட்ட காங்கிரசை சோனியாவிடம் சமர்ப்பிப்போம். காங்கிரசை பலப்படுத்துவோம். தோழமை உறவை வலுப்படுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications