3 பேரை கடத்தி ரூ.40 லட்சம் கொள்ளை-வியாசர்பாடி கும்பல் சிக்கியது
சென்னை: சென்னையில் மதுரை நகைக் கடை ஊழியர்கள் 3 பேரை நடுரோட்டில் ஆட்டோவிலிருந்து கடத்திச் சென்று தாக்கி ரூ. 40 லட்சம் கொள்ளையடித்த வியாசர்பாடியைச் சேர்ந்த கும்பல் பிடிபட்டது. இக் கும்பலைச் சேர்ந்த மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள தமிழ்நாடு ஜூவல்லரியைச் சேர்ந்த ஊழியர்கள் சிவமுருகேசன், பாலசுப்பிரமணி, இளங்கோ ஆகியோர் ரூ. 40 லட்சம் பணத்துடன் சென்னை வந்தனர்.
சென்னை மண்ணடியில் ஒரு விடுதியில் தங்கினர். தங்கம் விலை அதிகமாக இருந்ததால் நகையை வாங்க வேண்டாம் என கடையின் உரிமையாளர் பொன்னம்பலம் கூறிவிட்டார்.
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு பணத்துடன் மதுரை புறப்பட்டனர். ஆட்டோவில் கோயம்பேடு பஸ் நிலையம் சென்று கொண்டிருந்த அவர்களை அமைந்தகரை சிக்னல் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் வந்த 4 பேர் வழி மறித்தனர்.
நகைக்கடை ஊழியர்களையும், ஆட்டோ டிரைவரையும் தாக்கிய அவர்கள் சிறிது தூரத்தில் தயாராக நின்றிருந்த ஒரு வேனில் 3 ஊழியர்களையும் ஏற்றினர்.
மூவரையும் கத்தியால் தாக்கிய அக் கும்பல் பணப் பைகளை பறித்துக் கொண்டு நள்ளிரவில் மாதவரம் அருகே ஒரு மைதானத்தில் தள்ளி விட்டுவிட்டு தப்பிவிட்டது.
இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் தேன்தமிழ்வளவன் ஆகியோர் அடங்கிய தனிப் படை அமைக்கப்பட்டது.
இவர்கள் விசாரணையில் இறங்கி வியாசர்பாடியை சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளனர். மேலும் இக் கும்பலைச் சேர்ந்த 8 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் இந்த 8 பேரிடம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications