திமுகவினரை சுட்டுத் தள்ள சொன்னேனா-விஜய்காந்த்
சென்னை: திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 13ம் தேதி தேமுதிக சார்பில் ராமேசுவரத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு வருவதைக் கண்டித்து மிக பிரமாண்டமான முறையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏராளமான அளவில் மீனவர்கள் பங்கு பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி அங்கு வந்திருந்த பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தத்ரூபமாக வெளியிட்டன. ஆனால் ஒரு வார இதழ், நான் அங்கு பேசாததை பேசியதாக வெளியிட்டிருக்கிறது.
இந்த வாரம் 20ம் தேதி வெளியான அந்த பத்திரிகையில் முதல் பக்க அட்டையிலேயே எனது புகைப்படத்துடன், ஆளும் திமுகவினரை சுட்டு தள்ள வேண்டும் என்று நான் பேசியதாக தலைப்பிடப்பட்டுள்ளது.
பத்திரிகையின் உட் பகுதியில் வந்துள்ள செய்தியிலும், தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க திராணி இல்லாத ஆளும் திமுகவினரை சுட்டுத் தள்ள வேண்டும் என்று நான் முழக்கமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறியவாறு நான் அங்கு பேசாதது மட்டுமல்ல, எங்குமே பேசக் கூடியவன் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பேசாத ஒன்றை ராமேசுவரத்தில் பேசியதாக செய்தி வெளியிட்டிருப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு திரித்து வெளியிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, என்னைத் தனிப்பட்ட முறையில் அவதூறு செய்வதற்கும், நாட்டு மக்களிடையே கலவரத்தை தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.
கடந்த 6ம் தேதியன்றும் இதே போன்று அட்டையில் என் புகைப் படத்தை போட்டு, தன்னிலை மறந்து பேசிய விஜயகாந்த், என்று தலைப்பிட்டு நடக்காத சம்பவத்தை நடந்தது போல் அந்த பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இப்பொழுதும் அதைவிடப் பெரிய தவறை மீண்டும் செய்துள்ளது. எந்த பத்திரிகையும் நடுநிலையோடு செய்திகள் வெளியிடுவதையும் விமர்சனம் செய்வதையும் நான் முழு மனதோடு வரவேற்கிறேன்.
ஆனால் உள்நோக்கத்தோடு செய்திகளை இட்டுகட்டி வெளியிட்டு பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. வேண்டுமானால் அந்த பத்திரிகை ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படட்டும். ஆனால் பத்திரிகை தர்மம் தமிழ்நாட்டில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.
அவதூறு செய்திகளை தொடர்ந்து பரப்புவதும், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதும், தனிப்பட்ட முறையில் மக்களிடம் என்னைப் பற்றி தவறான கருத்தை பரப்ப முயலுவதும் தொழிலாகக் கொண்டுள்ளதால், அந்த பத்திரிகையின் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடர்வதற்கு அந்த பத்திரிகைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.
வழக்கமாக இதுபோன்ற மறுப்பு அறிக்கைகள் எல்லாம் விட மாட்டார் விஜய்காந்த். முரட்டு பேச்சு பேசிய காடுவெட்டி குரு கைதாகியுள்ள நிலையில் இந்த அறிக்கை விஜய்காந்திடம் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications