ஏ,பி,சி,டி..ரெளடிகள் தரப் பட்டியல்-சரத் தாக்கு
திருப்பூர்: கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் (காடுவெட்டி குரு) கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பேசியதற்கு தற்போது கைது செய்துள்ளனர். கூட்டணியில் இருக்கும் வரை அவர் பேசியது தவறாக தெரியவில்லையா? என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியாதவது:
தமிழகம் முழுவதும் கடும் மின் வெட்டு நிலவுகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தியும் குறைவு, வினியோகமும் சரிவர இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படிக்க இயலவில்லை.
பல தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள ரவுடிகளை ஏ,பி,சி,டி என தரம் பிரித்துள்ளனர். எந்த அடிப்படையில் இப்படி காவல் துறை தரம் பிரிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசை காப்பாற்ற தீவிர முயற்சி எடுத்து வரும் தமிழக முதல்வர் ஏன் இதற்கு முயற்சி எடுக்கவில்லை.
கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பேசியதற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கூட்டணியில் இருக்கும் வரை அவர் பேசியது தவறாக தெரியவில்லையா . கூட்டணியில் இல்லாமல் போனதும் கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கையாகவே உள்ளது.
மத்தியில் நிலையான அரசு அமைய மக்களவை தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications