சார்க்: இந்திய படைகளின் கட்டுப்பாட்டில் கொழும்பு!
டெல்லி: கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குப் பாதுகாப்பு அளிக்க போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்படவுள்ளன. தமிழக கடலோரப் பகுதிகளிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முப்படைகளும் கொழும்பில் பாதுகாப்பு தரும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தெற்காசிய கூட்டமைப்பான சார்க் அமைப்பின் மாநாடு கொழும்பில் வருகிற 27ம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு நடைபெறுகிறது. இதில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய நாட்களில் பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு செல்கிறார்.
சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வருவதால் கொழும்பில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரமதருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிவதற்காக பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், பாதுகாப்புத்துறை செயலாளர் விஜய் சிங் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு சமீபத்தில் கொழும்பு சென்றது.
மேலும், 1500 பேர் கொண்ட இந்திய ராணுவமும் கொழும்பு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளும், இலங்கையில் உள்ள சிங்கள கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் இதை இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா மறுத்தார். இலங்கை அரசே முழுமையான அளவில் பாதுகாப்பு தர முடியும் என்றார் அவர்.
இருப்பினும் விடுதலைப் புலிகளை சமாளிக்க இலங்கை படைகள் திணறி வருதால், முன்னெச்சரிக்கையாக பிரதமருக்குரிய பாதுகாப்பை இந்திய அரசே பார்த்துக் கொள்வது என வெளியுறவுத்துறை தீர்மானித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக பிரதமரின் பாதுகாப்புக்கு மூன்று அதி நவீன இந்திய போர்க்கப்பல்கள் இலங்கை செல்கின்றன. இது தவிர, அதிக அளவிலான சிறப்பு பாதுகாப்பு படையினரும் பிரதமருடன் செல்ல இருக்கின்றனர்.
கொழும்பு செல்லும் போர்க் கப்பல்களில் டெல்லி-கிளாஸ், ராஜபுத்-கிளாஸ் ஆகியவை முக்கியமானவை ஆகும். இவற்றில் இரண்டு ஸீ கிங் ஹெலிகாப்டர்கள் இருக்கும்.
ராஜபுத் போர்க்கப்பலில் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் இருக்கும். இது தவிர பிரதமரின் பாதுகாப்புக்கு செல்லும் அனைத்து போர்க் கப்பல்களிலுமே ஏவுகணைகளை வழி மறித்து தாக்கி அழிக்கும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, குறைந்த தூரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டுத்தள்ளும் 40 எம்.எம். எல்-70 ரக தானியங்கி விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இந்திய படைகளின் கட்டுப்பாட்டில் கொழும்பு:
பிரதமர் செல்லும் பாதையெங்கும் பாதுகாப்பை கண்காணிப்பதற்காக நவீன ரேடார்கள், குண்டு துளைக்காத கார்கள் போன்றவையும் கொண்டு செல்லப்படுகின்றன.
மாநாடு நடைபெறும் கொழும்பு நகரில் முக்கிய இடங்களான கொழும்பு கோட்டை, கல்பத்தி ஆகிய இடங்களில் வான்வெளியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் ரோந்து பணியில் ஈடுபடும்.
இலங்கை மற்றும் அந்நாட்டு கடற்கரைகளில் இந்த கப்பல்களும் விமானப்படை ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு பணியில் இருக்கும். அதே வேளையில் இந்திய-இலங்கை கடல் பகுதிகளில் கடலோர காவல்படையினரின் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக கடலோரங்களில் உஷார் நிலை:
தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை மற்றும் இந்திய உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்து இருப்பதால் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை, வேறு எந்த நாட்டுக்கும் பிரதமர் பயணம் செய்தபோது இதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் வெளிநாட்டுக்குச் சென்றால் மட்டுமே இப்படி தடபுடலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெற்காசியாவில் அத்தகையை பெருமையை மன்மோகன் சிங் முதல் முறையாக பெறுகிறார்.
மேலும், இந்திய முப்படைகளும், வெளிநாட்டுக்குச் ெசன்று நமது பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இப்படி அதிக அளவில் ஈடுபடுத்தப்படுவதும் இதுவே முதல் முறை.












Click it and Unblock the Notifications