ஜெயலலிதாவுக்கு தூதரை அணுப்பும் காரத்!

மத்தியில் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதிலும் அதைத் தொடர்ந்து காங்கிரஸ்-பாஜகவுக்கு எதிராக புதிய அணி அமைப்பதிலும் இடதுசாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதற்கு வசதியாக ஒத்த கருத்துடைய கட்சிகளை ஓரணியில் (அதாவது இன்னொரு 3வது அணி) கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதுதொடர்பான பணிகளில் இடதுசாரி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்று சென்னையில் நடந்த இடதுசாரிகளின் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றான, வலுவான அணியை தங்களது தலைமையில் உருவாக்கப் போவதாக பிரகாஷ் காரத் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்தப் புதிய அணியில் அதிமுகவையும் சேர்க்கலாம் என இடதுசாரி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதுதொடர்பாக ஜெயலலிதாவுடன் பேச, தூதர் ஒருவரை விரைவில் பிரகாஷ் காரத் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது.
இடதுசாரிகளின் இந்த முடிவுக்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத் ஆகிய கட்சிகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனவாம்.
முன்பு ஜெயலலிதா, சந்திரபாபு, முலாயம் சிங் யாதவ் ஆகியோரது தலைமையில் 3வது அணி உருவாக்கப்பட்டபோது இடதுசாரிகளையும் சேர்க்க ஜெயலலிதா கடுமையாக முயன்றார். ஆனால் அப்போது திமுகவின் தலையீட்டால் பிரகாஷ் காரத் பின்வாங்கியதால் இடதுசாரிகள், 3வது அணியில் சேரவில்லை.
இந்த நிலையில் ஜெயலலிதாவைத் தேடி இடதுசாரிகளே வருவது அரசியல் அரங்கில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுக்கு மக்களவையில் எம்பிக்கள் இல்லை. இதனால் நம்பிக்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜெயலலிதாவை காங்கிரசோ, பாஜகவோ கண்டுகொள்ளவேயில்லை.












Click it and Unblock the Notifications