புலிகளின் முக்கிய கடல் முகாம் சிக்கியது - 30 பேர் பலி
கொழும்பு: மன்னார் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய கடற்தள முகாமான விடத்தல் தீவு பகுதியை மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இங்கு நடந்த சண்டையில், 30க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான தீவு விடத்தல் தீவு. இப்பகுதியை கடற்படை தளமாகவும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வட மேற்கு இலங்கையில், மன்னாரிலிருந்து 20கிலோமீட்டர் தொலைவில் உள்ள விடத்தல் தீவு அப்பகுதியில் மிகப் பெரிய நகராகும். விடுதலைப் புலிகளின் மேற்குப் பிராந்திய கடற்படை தளமாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்தப் பகுதியை கைப்பற்றியுள்ளதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விமானப்படையின் எம்ஐ -24 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் விடத்தல் தீவு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,அதில், புலிகளின் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் ராணுவம் கூறுகிறது.
இன்னொரு சண்டையில், விமானப்படை போர் விமானங்கள் விடத்தல்தீவிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில்உள்ள கடற்புலிகளின் கூட்ட இடத்தை குண்டு வீசி தாக்கி அழித்ததாக ராணுவம் தெரிவிக்கிறது.
இப்பகுதியில் ராணுவத்தினரை எதிர்த்து 60க்கும் மேற்பட்ட விடுதலைப புலிகள் சண்டையிட்டனர். இவர்களில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பி விட்டனர் என்று ராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
விடத்தல் தீவு கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு ராணுவத்தின் வசம் வந்திருப்பதாக ராணுவ பிரிகேடியர் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
விடத்தல் தீவை ராணுவம் கைப்பற்றியது தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications