சைக்கோ கொலைகாரனை சுட்டுப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவு
சென்னை: சென்னையைக் கலக்கி வரும் சைக்கோ கொலைகாரனை தேவைப்பட்டால் சுட்டுப் பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை நகரின் மையப் பகுதிகளான கே.கே.நகர், அசோக் நகர், மாம்பலம், வடபழனி ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தலையில் கல்லால் நசுக்கியும், தீவைத்து எரித்தும் இவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் காவலாளிகள். கொலையாளி ஒரே நபராகத்தான் இருக்க முடியும், அவர் சைக்கோ நபராக இருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
சைக்கோ மனிதனின் அட்டகாசத்தால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். போலீஸை நம்பினால் வேலைக்கு ஆகாது என்ற எண்ணத்தில் மக்களே கம்புகள், கட்டைகளுடன் இரவு நேரங்களில் சாலைகளில் ரோந்து செல்வதால் காவல்துறைக்கு பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.
கொலையாளியைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு விடிய விடிய தேடுதல் வேட்டையும் நடந்துவருகிறது.
இதுவரை நான்கு பேரை போலீஸார்பிடித்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் கைதி ஒருவர்தான் இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்க முடியும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
நேற்று மாநகர காவல்துறை ஆணையர் சேகரே நேரடியாக இரவு ரோந்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சேகர் கூறுகையில், வடபழனி, அசோக்நகர், மேற்கு மாம்பலம் ஆகிய பகுதிகளில் சமீப காலங்களில் இரவு நேரங்களில் மர்மமான முறையில் கொலை சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. இதில் ஏற்கனவே நடைபெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற 3 கொலை சம்பவங்கள் தொடர்பான நபர்கள் மட்டும் தேடப்பட்டு வருகின்றனர். இந்த 3 கொலைகளும் ஒரே விதமான முறையில் நிகழ்ந்துள்ளன. பொதுமக்கள் இது குறித்து பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
இதற்கிடையே தேவைப்பட்டால் சைக்கோ கொலைகாரனை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கவும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications